தமது பிரஜைகளை மீண்டும் அழைத்து வருவதற்கும், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பயணிகள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கும் ஏதுவாக, அயல் நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பான வான் வழித்தடங்களை (Safe Air Corridors) திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.
இது குறித்து செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அந்நாட்டின் பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல் மர்ரி (Abdulla bin Touq Al Marri), ஒரு மணித்தியாலத்திற்கு 48 அவசரக்கால விமானங்களை இயக்கும் திறன் தமது நாட்டிற்கு உண்டு எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாதுகாப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த விமானங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 60 விமானங்களின் ஊடாக 17,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அடுத்தகட்டமாக, நாளொன்றுக்கு 80-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி, 27,000-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.