ஈரானின் அதியுயர் தலைவர் அலி காமேனியின் மறைவைத் தொடர்ந்து, அவரது புதல்வர் மோஜ்தபா காமேனி (Mojtaba Khamenei) ஈரானின் அடுத்த உயர் தலைவராக அந்நாட்டின் நிபுணர்கள் சபையினால் (Assembly of Experts) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ‘ஈரான் இன்டர்நேஷனல்’ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ஈரானிய புரட்சிகர இராணுவத்தின் (IRGC) கடும் அழுத்தத்திற்கு மத்தியிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத் மீதான கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வார இறுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் போது அவர் கொல்லப்பட்டதாக முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வெளியான போதிலும், அவர் உயிர் தப்பியுள்ளமை தற்போது உறுதியாகியுள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் பாதுகாப்பு மற்றும் இராணுவக் கட்டமைப்புகளில் பாரிய குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டளைக் கட்டமைப்பு சீர்குலைவு: இராணுவத்தின் கட்டளைப் படிநிலைகள் சிதைந்துள்ளதால், உத்தரவுகளைப் பிறப்பிப்பதிலும் ஒருங்கிணைப்பதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன.
பணிக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர்: அமெரிக்க-இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் தொடரக்கூடும் என்ற அச்சத்தினால், கீழ்நிலை இராணுவத்தினர் மற்றும் சில தளபதிகள் தமது தளங்களுக்குச் சமூகமளிக்கத் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை விடிந்ததும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கி பாரிய போராட்டங்களை முன்னெடுக்கக்கூடும் என புரட்சிகர இராணுவம் கடும் கவலையடைந்துள்ளது.
இதன் காரணமாகவே, அரசியலமைப்பு ரீதியான நடைமுறைகளைத் தவிர்த்து, அவசர அவசரமாகப் புதிய தலைவரை நியமிக்க இராணுவம் அழுத்தம் கொடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.