உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அடிப்படை உரிமை மனுவை தொடர்பாக, தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையானிடமிருந்து வழிகாட்டுதல்களை பெறுவதற்காக அவரது சட்டத்தரணிக்கு அணுகல் வழங்கும் சாத்தியத்தை பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (06) சட்ட மா அதிபருக்கு அறிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 2016ஆம் ஆண்டு தன்னை கைது செய்து தடுப்பில் வைத்ததற்கு எதிராக பிள்ளையான் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த நேரத்தில் மனுதாரர் பிள்ளையானின் சார்பில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது வாடிக்கையாளருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், பின்னர் அவர் அந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
எனினும், தற்போது வேறு ஒரு சம்பவம் தொடர்பில் அவரது வாடிக்கையாளர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மனுவை தொடர்ந்தும் முன்னெடுக்குவது குறித்து அவரிடமிருந்து தேவையான வழிகாட்டுதல்களை பெற முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வாவிடம், காவலில் உள்ள நபரை தொடர்புகொண்டு தேவையான வழிகாட்டுதல்களை பெறுவதற்கான அணுகலை ஏற்படுத்த முடியுமா என வினவினர்.
அதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், மனுதாரர் தரப்பின் சட்டத்தரணிகள் இதற்காக கோரிக்கை விடுத்தால் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, காவலில் உள்ள மனுதாரரிடமிருந்து தேவையான வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, இந்த மனுவை விசாரணைக்காக வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிடப்பட்டது.