ஈரானின் புதிய அதியுயர் தலைவராக கமேனியின் புதல்வர் நியமனம்?

ஈரானின் புதிய அதியுயர் தலைவராக கமேனியின் புதல்வர் நியமனம்?

ஈரானின் அதியுயர் தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி அண்மையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது புதல்வர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, தெஹ்ரானிலுள்ள எரிபொருள் களஞ்சியங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் பாரிய விமானத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதுடன், வளைகுடா நாடுகளுக்கும் போர் விரிவடைந்துள்ளது.

புதிய அதியுயர் தலைவரைத் தெரிவு செய்யும் மதகுருமார் சபையின் (Clerical Council) உறுப்பினர் அயதுல்லா ஹொசைன் அலி எஷ்கேவரி கருத்துத் தெரிவிக்கையில், "கமேனியின் பெயர் தொடரும். வாக்கெடுப்பு நடத்தப்பட்டுவிட்டது, அதன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் பாதுகாப்புப் படைகள் மற்றும் வர்த்தக வலையமைப்புகளில் பலம் வாய்ந்த செல்வாக்கைக் கொண்டுள்ள மொஜ்தபா கமேனி தலைவராகத் தெரிவு செய்யப்படுவது, ஈரான் தொடர்ந்தும் கடும்போக்கு நிலைப்பாட்டிலேயே இருக்கும் என்பதைக் காட்டுகின்றது.

தெஹ்ரானிலுள்ள முக்கிய எரிபொருள் மற்றும் எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, நகரின் வான்பரப்பில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகின்றது.

பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்குத் தேவையான எரிபொருட்களை அழிப்பதே இத்தாக்குதலின் நோக்கம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், பொதுமக்கள் மத்தியில் நச்சுப் பொருட்கள் பரவுவதால் இது ஒரு "போர்க்குற்றம்" என ஈரான் சாடியுள்ளது.

ஈரானின் புதிய தலைமைத்துவத் தெரிவில் அமெரிக்காவின் கருத்து உள்வாங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். "அமெரிக்காவின் அங்கீகாரம் கிடைக்காவிட்டால், அந்தத் தலைமைத்துவம் நீண்டகாலம் நிலைத்திருக்காது" என அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானின் அணுவாயுதக் கையிருப்பை மீட்பதற்காகத் தரைப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பஹ்ரைனின் கடல்நீரை நன்னீராக்கும் நிலையம் (Desalination plant) ஒன்றும், குவைத்தின் அரச கட்டடம் ஒன்றும் இத்தாக்குதல்களில் சேதமடைந்துள்ளன. ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இப்போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி