ஈரானின் அதியுயர் தலைவராக விளங்கிய அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது புதல்வர் மொஜ்தாபா கமேனி புதிய உயர்மட்டத் தலைவராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாற்றமானது மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரானின் கடும்போக்குவாத நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானின் அதியுயர் தலைவரைத் தெரிவு செய்யும் 88 மதகுருமார்களைக் கொண்ட 'நிபுணர்கள் சபை' (Assembly of Experts), ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய அயதுல்லா செய்யித் மொஜ்தாபா ஹொசைனி கமேனியை ஈரானின் மூன்றாவது அதியுயர் தலைவராக பிரகடனப்படுத்தியது. ஈரானின் பாதுகாப்புப் படைகள் மற்றும் வர்த்தக வலைப்பின்னல்களில் அதிக செல்வாக்குக் கொண்டவராக மொஜ்தாபா கருதப்படுகின்றார்.
புதிய தலைவரின் நியமனம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் தலைவரைத் தெரிவு செய்வதில் வாஷிங்டனுக்கும் பங்கு இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். "எமது அங்கீகாரம் இன்றி நியமிக்கப்படும் எவரும் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது" என அவர் எச்சரித்துள்ளார். இதேவேளை, ஈரானின் புதிய தலைமையைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தது.
மறுபுறம், ஈரானிய ஆயுதப் படைகள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆகியன புதிய தலைவர் மொஜ்தாபாவிற்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், அவரது கட்டளைகளுக்கு அடிபணியத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுடன் தொடுத்துள்ள நேரடிப் போர் ஒரு வாரத்தைக் கடந்துள்ள நிலையில், உலகப் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் பாரியளவில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. குறிப்பாக ப்ரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் 17 சதவீதத்தால் அதிகரித்து 108 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இப்பிராந்தியத்தின் ஊடான எண்ணெய் விநியோகக் கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக விநியோகத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் சந்தையில் நிலவுகிறது.
ஆசியப் பங்குச் சந்தைகள் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதுடன், யூரோ மற்றும் யென் நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதி சடுதியாக அதிகரித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்கள் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றன. ஈரானின் எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால் இதுவரை 1,332 ஈரானிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், சவூதி அரேபியா, கட்டார், குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளிலுள்ள தனது தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு வாஷிங்டன் உத்தரவிட்டுள்ளது. ஈரானின் பதில் தாக்குதல்கள் இப்பிராந்தியத்திலுள்ள அமெரிக்க நிலைகளை இலக்கு வைத்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
ஈரானின் ஆட்சி மாற்றமும் பிராந்தியப் போரும் இலங்கையைப் போன்ற எரிபொருள் இறக்குமதியை நம்பியுள்ள நாடுகளுக்கு பாரிய பொருளாதார சவால்களைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இப்பதற்ற நிலை, சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்த புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.