இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 'ஐரிஸ் டெனா' கப்பலைச் சேர்ந்த கடற்படையினரின் சடலங்களை விரைவில் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் 'பார்ஸ்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உயிரிழந்த 104 கடற்படையினரில் 84 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த சடலங்கள் விரைவில் ஈரானுக்கு கொண்டு வரப்படும் என்றும் இராணுவ மக்கள் தொடர்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் வெளிவிவகார அமைச்சின் முயற்சி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த சடலங்களை மீளப்பெறும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உயிரிழந்த ஈரான் கடற்படையினரின் சடலங்களை ஈரானிடம் ஒப்படைக்க வேண்டாம் என வொஷிங்டன் (அமெரிக்கா), இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இலங்கையின் கடல் எல்லைக்குள் நிலவும் பதற்றமான சூழலில், நாடு ஒரு நடுநிலையான கொள்கையையே பின்பற்றுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
தற்போது இலங்கையின் பொறுப்பில் 84 உடலங்கள் உள்ளதாகவும், ஈரான் அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அவற்றை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 32 பேர் மற்றும் இரண்டாவது கப்பலில் இருந்து பொறுப்பேற்கப்பட்ட 206 கடற்படையினர் தற்போது இலங்கை கடற்படை மற்றும் மருத்துவமனைகளின் கண்காணிப்பில் உள்ளனர்.
சர்வதேச உடன்படிக்கைகளின்படி, அவர்கள் இலங்கையில் இருக்கும் வரை அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செலவுகளையும் அரசாங்கமே பொறுப்பேற்கும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.