Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

12 கனடிய இராணுவ வீரர்களின் எச்சங்களை கையளித்தது அமெரிக்க அருங்காட்சியகம்!

12 கனடிய இராணுவ வீரர்களின் எச்சங்களை கையளித்தது அமெரிக்க அருங்காட்சியகம்!

முதலாம் உலகப் போரின் போது உயிரிழந்த 12 கனடிய இராணுவ வீரர்களின் உடல் எச்சங்களை அமெரிக்காவின் மருத்துவ அருங்காட்சியகம் ஒன்று மீண்டும் கனடாவிடம் ஒப்படைத்துள்ளது.

யுத்தம் நிறைவடைந்த பின்னர், மருத்துவ ஆய்வுகளுக்காக சேகரிக்கப்பட்ட இந்த எச்சங்கள், 1919 ஆம் ஆண்டு பிலடெல்பியாவிலுள்ள 'மட்டர்' (Mutter Museum) அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு இவை காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக கனடிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுநலவாய நாடுகளின் போர் கல்லறைகள் ஆணைக்குழுவின் (Commonwealth War Graves Commission) வழிகாட்டலில், உலகெங்கிலும் உள்ள இராணுவ வீரர்களின் எச்சங்களை மீட்டெடுக்கும் சர்வதேச முயற்சியில் கனடிய ஆயுதப்படையினரும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

மீட்டெடுக்கப்பட்ட இந்த எச்சங்கள், அந்தந்த வீரர்களுக்குரிய கல்லறைகளில் மீண்டும் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன. இதில் பெரும்பாலான வீரர்களின் கல்லறைகள் பிரான்ஸின் 'லெ ட்ரெப்போர்ட்' (Le Tréport) பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 139 மண்டை ஓடுகளைக் கொண்ட சுவரைத் தனது பிரதான அம்சமாகக் கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம், பழங்குடியின மக்கள் மற்றும் பிற நாட்டு வீரர்களின் உடல் பாகங்களைக் காட்சிப்படுத்துவது தொடர்பில் நீண்டகாலமாகப் பல்வேறு சர்ச்சைகளை எதிர்நோக்கி வருகின்றது.

இதற்கு முன்னர், 2017 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போர் வீரர் ஒருவரின் மண்டை ஓட்டை இந்த அருங்காட்சியகம் ஆஸ்திரேலியாவிடம் ஒப்படைத்திருந்தது.