ஈரானியப் பாடசாலையொன்றின் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 175 பேர் கொல்லப்பட்டமைக்கு, அமெரிக்க இராணுவத்தின் 'இலக்குத் தவறியமையே' (Targeting mistake) காரணம் எனத் தெரியவந்துள்ளது.
எனினும், இது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கைகள் குறித்துத் தனக்குத் தெரியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி தெற்கு ஈரானிய நகரமான மினாப்பில் (Minab) உள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் மீது அமெரிக்காவின் 'டொமாஹாக்' (Tomahawk) ஏவுகணை தாக்கியது.
இச்சம்பவம் குறித்து 'தி நியூயார்க் டைம்ஸ்' (The New York Times) வெளியிட்டுள்ள புலனாய்வுச் செய்தியின் படி, குறித்த பாடசாலைக் கட்டிடம் ஒரு இராணுவ இலக்கு எனத் தவறாக அடையாளம் காணப்பட்டமையே இப்பாரிய உயிரிழப்புகளுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
காலாவதியான உளவுத் தகவல்கள்அமெரிக்கப் பாதுகாப்பு புலனாய்வு முகமை (DIA) வழங்கிய காலாவதியான அல்லது தவறான உளவுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தாக்குதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
குறித்த பாடசாலைக் கட்டிடம் முன்னர் ஈரானியப் புரட்சிகர இராணுவத்தின் (IRGC) கடற்படைத் தளத்தின் ஒரு பகுதியாக இருந்த போதிலும், கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே அது இராணுவத் தளத்திலிருந்து பிரிக்கப்பட்டு பாடசாலையாக மாற்றப்பட்டிருந்தது.
பாடசாலைச் சுவர்களில் வரையப்பட்டிருந்த வர்ணச் சித்திரங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் செய்மதிப் படங்களில் தெளிவாகத் தெரிந்த போதிலும், அமெரிக்க இராணுவத் திட்டமிடுபவர்கள் இதனை இராணுவ இலக்காகவே கருதித் தாக்கியுள்ளனர்.
அதிபர் ட்ரம்பின் முரணான கருத்துக்கள்இந்தத் தாக்குதல் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அதிபர் ட்ரம்ப், குறித்த விசாரணை முடிவுகள் பற்றித் தனக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை என்று கூறினார்.
"டொமாஹாக் ஏவுகணைகள் மிகவும் சக்திவாய்ந்தவை. அவை ஏனைய நாடுகளிடமும் உள்ளன. ஈரான் கூட இவ்வாறான ஏவுகணைகளைக் கொண்டிருக்கலாம். எதுவாக இருந்தாலும் விசாரணை அறிக்கை எதனைக் கூறுகிறதோ அதனை நான் ஏற்றுக்கொள்வேன்" என அவர் முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவித்தார்.
முன்னதாக, இத்தாக்கத்திற்கு ஈரான் தான் பொறுப்பு எனக் கூறியிருந்த ட்ரம்ப், ஈரானிய ஆயுதங்கள் துல்லியமற்றவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், தற்போது அமெரிக்காவே இத்தாக்குதலுக்குப் பொறுப்பு என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை வெள்ளை மாளிகைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கண்டனம்யுனெஸ்கோ (UNESCO) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இத்தாக்குதலை ஒரு பாரிய போர்க்குற்றம் என வர்ணித்துள்ளன.
கொல்லப்பட்டவர்களில் 150-க்கும் மேற்பட்டோர் 7 முதல் 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் என்பது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.