இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமையும், அதில் ஏற்பட்ட மாலுமிகளின் சோகமான உயிரிழப்புகளும் சமூக ஊடகங்கள் மற்றும் பாரம்பரிய ஊடகங்களில் பாரிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளன.
இந்தியா மற்றும் இலங்கையில் எஞ்சியுள்ள ஏனைய ஈரானியக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் நிலை குறித்து எழுந்துள்ள பல்வேறு ஊகங்கள் இந்த விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
எவ்வாறாயினும், இந்த விவாதங்களில் பெரும்பாலானவை ஷேக்ஸ்பியரின் 'Much Ado About Nothing' (அற்ப விடயத்திற்காக பெரும் ஆரவாரம் செய்தல்) என்பதைப் போலவே அமைந்துள்ளன. மக்களின் புரிதலுக்கும் நிலவும் கசப்பான யதார்த்தத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது.
உண்மையிலேயே, குழப்பம் நிறைந்த தற்போதைய சர்வதேச ஒழுங்கிற்குத் தேவையான 'மூலோபாய யதார்த்தவாதத்துடன்' (Strategic Realism) இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் இந்த முன்னெப்பொழுதும் இல்லாத சூழலுக்குப் பதிலளித்துள்ளன.
உயிரிழப்புகள் என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சோகமாகும், இதில் மனிதாபிமான ரீதியிலான அணுகுமுறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதேவேளை, மூலோபாயக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இரு நாடுகளின் அரசாங்கங்களும் இந்தச் சிக்கலான சவாலை மிகுந்த நிதானத்துடனும் விவேகத்துடனும் கையாண்டுள்ளன.
ஈரான் - அமெரிக்க மோதல் இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ள நிலையில், இப்பிராந்தியத்தின் பிரதான பாதுகாப்பு வழங்குநராக (Net Security Provider) இந்தியா இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும் எனச் சில விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
இன்னும் சிலர், இந்தியப் பெருங்கடலை 'அமைதி வலயமாக' வைத்திருக்க வேண்டும் என்ற பழைய கோட்பாட்டை முன்வைத்து, இவ்வாறான மோதல்கள் இப்பிராந்தியத்திற்குள் நுழையக் கூடாது என வலியுறுத்துகின்றனர்.
இத்தகைய வாதங்கள் பிராந்தியத்தை வடிவமைத்துள்ள மூலோபாய யதார்த்தங்களைப் புறக்கணிக்கின்றன. இந்தியப் பெருங்கடல் ஒருபோதும் ஒரு புவிசார் அரசியல் வெற்றிடமாக (Geopolitical vacuum) இருந்ததில்லை. இது வரலாற்று ரீதியாகப் பல வல்லரசுகளின் இருப்பிடமாகவும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இடமாகவும் இருந்துள்ளது.
உதாரணமாக, அமெரிக்கா 50 ஆண்டுகளுக்கும் மேலாக டியேகோ கார்சியாவில் பாரிய இராணுவத் தளத்தைப் பராமரித்து வருகின்றது. அதேபோல், ஜிபூட்டி (Djibouti) நாடு இன்று அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளின் இராணுவத் தளங்களுக்கு இடமளித்துள்ளது.
இந்தச் சூழலில், இந்தியப் பெருங்கடல் மட்டும் உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்களிலிருந்து விலகித் தனித்து இருக்க முடியும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்றாகும்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியதும் இதே யதார்த்தத்தையே ஆகும். இந்தியப் பெருங்கடல் என்பது பலதரப்பட்ட சக்திகளின் நலன்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிக்கலான மூலோபாயப் பிராந்தியமாகும்.
இப்பிராந்தியத்தின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா அதன் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் - ஆனால் அது ஒரு கற்பனையான கட்டமைப்புக்குள் அல்லாமல், யதார்த்தமான ஒரு கட்டமைப்புக்குள்ளேயே நிகழும்.
இந்தச் சம்பவம், பிராந்தியத்தின் 'பாதுகாப்பு வழங்குநர்' என்ற இந்தியாவின் வகிபாகத்தில் உள்ள சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இத்தகைய சிக்கலான கடல்சார் பரப்பில் தலைமைத்துவம் என்பது எப்போதும் பகிரங்க மோதல்கள் அல்லது அதிரடி நடவடிக்கைகளை உள்ளடக்கியதல்ல.
மாறாக, நிசப்த இராஜதந்திரம், அவதானமான நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் வல்லரசுகளுக்கிடையிலான போட்டி நலன்களைச் சமநிலைப்படுத்தும் திறன் ஆகியவையே அவசியமானவை. இத்தகைய தருணங்களில், வெளிப்படையான பலப்பரீட்சையை விட நிதானமே வலிமையைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான சர்வதேச ஒழுங்கு தற்போது பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், அது ஏற்கனவே மாற்றமடையத் தொடங்கியுள்ளது. உலகம் கணிக்கக்கூடிய விதிகள் மற்றும் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் என்ற நம்பிக்கை மாறி, போட்டித்தன்மை வாய்ந்த சர்வதேச சூழல் உருவாகி வருகின்றது.
உதித்து வரும் இந்தப் புதிய உலகளாவிய நிலப்பரப்பு பெரும்பாலும் குழப்பமானதாகவும், சர்ச்சைக்குரியதாகவும், சில நேரங்களில் ஆபத்தானதாகவும் இருக்கும். இது 1945-க்குப் பிந்தைய ஒழுங்கமைக்கப்பட்ட முறையை விட, 19 ஆம் நூற்றாண்டின் 'மகா விளையாட்டின்' (The Great Game) புவிசார் அரசியல் போட்டிகளை ஒத்ததாக இருக்கும்.
இந்தச் சூழலை எதிர்கொள்வதில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் தகுந்த யதார்த்தவாதத்தையே வெளிப்படுத்தியுள்ளன. அதாவது, தேவையற்ற மோதல் அதிகரிப்புகளைத் தவிர்த்து, மூலோபாய விவேகத்துடன் மனிதாபிமான விடயங்களைச் சமநிலைப்படுத்தியுள்ளன.
இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளுக்கு முன்னாலுள்ள உண்மையான சவால், இந்த யதார்த்தங்களைத் தவிர்ப்பதல்ல, மாறாக அவற்றை அறிவுப்பூர்வமாகக் கையாண்டு முன்னோக்கிச் செல்வதேயாகும்.