தற்போதைய திசைக்காட்டி அரசாங்கத்தின் மக்கள்வாதம் என்பது வெறும் நிழற்படங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு 'கண் துடைப்பு' நாடகமே தவிர, அது கொள்கை ரீதியான மாற்றமல்ல என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் முன்னிலை சோசலிசக் கட்சியினரை 20ஆம் நூற்றாண்டின் பழைய இடதுசாரி கொள்கைகளைக் கைவிட்டு, திசைக்காட்டியைப் போல 'நவீனமாக' மாறுமாறு ஒரு தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
எனினும், கொள்கை ரீதியான மாற்றுவழியைக் கொண்டிராத அத்தகைய 'திசைக்காட்டி மயமாக்கல்' எவ்வித நன்மையையும் தராது என்பது தற்போதைய நெருக்கடிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வடைந்த சில மணிநேரங்களிலேயே, அரசாங்கத்திடம் ஏற்கனவே இருந்த பழைய இருப்புக்களைக் கூடக் கணக்கில் கொள்ளாமல், உடனடியாக விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளமையை 'மக்கள்வாத அரசாங்கம்' என அழைக்க முடியாது.
மக்களின் பெயரால் ஆட்சிக்கு வந்த இந்த அரசு, முன்னெப்போதும் இல்லாத வகையில் மின்சார சபையைத் துண்டாடும் நடவடிக்கைகளை முன்னின்று மேற்கொள்வது அவர்களின் உண்மையான முகத்தை வௌிப்படுத்துகின்றது.
"மக்கள்வாத அரசாங்கம் என்று கூறிக்கொண்டு ஜனாதிபதியுடன் மக்கள் கைகுலுக்கும் அல்லது நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடும் அரசியல் இப்போது அவசியமில்லை. மாறாக, நிலவும் பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதற்கான கொள்கை ரீதியான மாற்று வழிகளே தற்போதையத் தேவையாகும்."
ஜனநாயக விரோத அரசாங்கங்கள் என்று வர்ணிக்கப்பட்ட முந்தைய ஆட்சிகள் கூட, நஷ்டத்தைச் சுமந்து கொண்டாவது மக்கள் மீது பாரிய விலைச் சுமைகளை ஏற்றாமல் இருக்க முயற்சித்தன.
ஆனால், 'மக்கள்வாத' முகமூடி அணிந்துள்ள தற்போதைய அரசு, ஐ.ஓ.சி (IOC) மற்றும் சினோபெக் (Sinopec) போன்ற நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதற்கு வழிவகை செய்துவிட்டு, மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழுத்தம் ஒரு கட்டத்தில் வெடிக்கும் போது, வெறும் புகைப்படங்களோ அல்லது கண் துடைப்புக்களோ தீர்வாகாது. அன்றைய தினம் நாட்டுக்கு உண்மையானதொரு கொள்கை ரீதியான மாற்றுத் தலைமை அவசியப்படும் என்பது திண்ணம்.