பொதுமக்களின் சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் எரிவாயு உற்பத்தி வலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இக்கட்டான சூழல் குறித்து தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் கட்டார் அமீர் (Emir of Qatar) ஆகியோருடன் விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜனாதிபதி மக்ரோன் உறுதிப்படுத்தியுள்ளார்.
எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதிப்பதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலைத் தணிப்பதற்கும், அத்தியாவசிய சிவில் கட்டுமானங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும் என பிரான்ஸ் இதன்போது அழைப்பு விடுத்துள்ளது.