இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் எதிர்வரும் சில நாட்களில் இடி மின்னலுடன் கூடிய கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்குறிப்பிட்ட பிராந்தியங்களில் தற்போது ஒரு அசாதாரண காலநிலை மாற்றம் உருவாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தொடங்கி பாகிஸ்தான் ஊடாக சுமார் 1000 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு பாரிய மழை மேக மண்டலம் (Rain Zone) உருவாகி வருகின்றது.
இந்தியாவைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஒரு குறைந்த அழுத்த மண்டலம் (Low Pressure Area) உருவாகி வருவதாக வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.
இதன் காரணமாக இந்தியாவின் சில பகுதிகளில் இடிமுழக்கத்துடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், மணித்தியாலத்திற்கு 40 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கடும் மழையுடன் சேர்த்து சில மலைப்பாங்கான பகுதிகளில் அசாதாரண பனிப்பொழிவும் பதிவாகக்கூடும் என இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்தத் தீடீர் காலநிலை மாற்றம் காரணமாகத் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயங்கள் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.