ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான இராணுவ மோதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தைத் தாண்டி, தற்போது இந்தியப் பெருங்கடல் வரை விரிவடையும் அபாயத்தைக் காட்டியுள்ளன.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள முக்கிய அமெரிக்க-பிரித்தானிய கூட்டு இராணுவத் தளமான ‘டியேகோ கார்சியா’ (Diego Garcia) மீது ஈரான் இரு ஏவுகணைகளை ஏவியுள்ளமையே இதற்குக் காரணமாகும்.
இருப்பினும், இந்த ஏவுகணைகள் இலக்குகளைச் சரியாகச் சென்றடையவில்லை என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஒரு ஏவுகணை நடுவானில் செயலிழந்து வீழ்ந்ததோடு, மற்றைய ஏவுகணை அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றிலிருந்து ஏவப்பட்ட முறியடிப்பு ஏவுகணைத் தொகுதி மூலம் அழிக்கப்பட்டுள்ளது.
ஈரானிலிருந்து டியேகோ கார்சியா தீவு சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதன் மூலம், 4,000 கி.மீ தூரம் வரை தாக்கக்கூடிய ஏவுகணைகள் ஈரானிடம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஈரானிடம் 2,000 கி.மீ வீச்சு கொண்ட ஏவுகணைகளே இருப்பதாக அமெரிக்கா கணிப்பிட்டிருந்தது.
இது மத்திய இந்தியப் பெருங்கடலில் உள்ள சாகோஸ் தீவுக்கூட்டத்தில் (Chagos Islands) அமைந்துள்ள மிகப்பெரிய தீவாகும். இது இலங்கையிலிருந்து சுமார் 1,700 கி.மீ (1,000 மைல்கள்) தொலைவில் தெற்கு திசையில் அமைந்துள்ளது.
1960-களில் பிரித்தானியா இத்தீவில் வாழ்ந்த சுதேச மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, அமெரிக்காவிற்கு இராணுவத் தளம் அமைப்பதற்காக இதனை குத்தகைக்கு வழங்கியது.
நீண்டகால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, இத்தீவுகளின் இறையாண்மை மொரிஷியஸ் நாட்டிற்குச் சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், அமெரிக்க இராணுவத் தளத்தின் தேவை கருதி இதன் உடன்படிக்கைகள் இன்னும் சிக்கலான முறையிலேயே நடைமுறையில் உள்ளன.
மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியங்களில் நடக்கும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் தலையிடுவதற்கும் அமெரிக்க விமான மற்றும் கடற்படைகள் இந்தத் தளத்தைப் பயன்படுத்துகின்றன.
இங்கு சிவில் குடியிருப்புகள் எதுவும் இல்லை. அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் மட்டுமே இங்கு வசிக்கின்றனர்.