யுத்தம் முடிந்தாலும், தொடரப்போகும் மக்கள் சுமைகள்!

யுத்தம் முடிந்தாலும், தொடரப்போகும் மக்கள் சுமைகள்!

மூன்றாவது வளைகுடாப் போர் (Third Gulf War) ஆரம்பமாகி இப்போது நான்கு வாரங்கள் கடந்துவிட்டன.

கப்பல்கள் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்களால் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ள ஒவ்வொரு நாளும், உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு முடங்கியுள்ளது.

இதன் காரணமாக, ஒவ்வொரு நாளும் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் இழப்புகள் குறித்த தரவுகளை வர்த்தகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

போர் ஆரம்பிப்பதற்கு முன் இருந்த விலையை விட தற்போது பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய்ப் விலை 40% அதிகரித்து, ஒரு பீப்பாய் சுமார் 100 டொலராக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவின் எரிவாயு விலை 70% வரை அதிகரித்துள்ளது.

விலைகள் மேலும் உயராமல் இருப்பதற்குக் காரணம், விநியோகம் விரைவில் சீராகும் என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையாகும். மார்ச் 23 அன்று, டொனால்ட் டிரம்ப் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல் எச்சரிக்கையைத் தள்ளிவைத்தார்.

ஈரான் உடனான "பயனுள்ள பேச்சுவார்த்தைகள்" மூலம் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முதலீட்டாளர்கள் மே மாதத்திற்குள் நிலைமை சீராகும் என எதிர்பார்த்தாலும், The Economist இதழின் ஆய்வின்படி, இன்று போர் முடிவுக்கு வந்தாலும் சந்தை இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் எடுக்கும்.

டிரம்ப் அவர்களின் பேச்சுவார்த்தை வெற்றி பெற்று நீரிணை திறக்கப்பட்டாலும், உலகப் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கும்.

எரிசக்தி சந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டுமானால் பின்வரும் மூன்று விடயங்கள் பூர்த்தியாக வேண்டும்:

01. வளைகுடா நாடுகள் தமது எண்ணெய் உற்பத்தியை போருக்கு முந்தைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

02. அந்த உற்பத்திகள் கப்பல்கள் மூலம் வெளிநாட்டு சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.

03. கச்சா எண்ணெயைப் பயன்படுத்தக்கூடிய எரிபொருளாக மாற்ற சுத்திகரிப்பு நிலையங்கள் செயலாற்ற வேண்டும்.

தற்போது ஏற்றுமதி செய்ய முடியாத நிலை மற்றும் சேமிப்பு வசதிகளின் பற்றாக்குறை காரணமாக, வளைகுடா நாடுகள் தமது தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை சுமார் 10 மில்லியன் பீப்பாய்களால் (10m b/d) குறைத்துள்ளன.

இது உலகளாவிய மொத்த உற்பத்தியில் 10% ஆகும். போர் நிறுத்தப்பட்ட பின்னரும், முடக்கப்பட்ட இந்த உற்பத்திச் செயல்முறைகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு கணிசமான காலம் எடுக்கும்.