நியூயோர்க் லாகார்டியா விமான விபத்து: தீயணைப்பு வாகனத்தில் எச்சரிக்கை கருவிகள் இல்லாமை அம்பலம்!

நியூயோர்க் லாகார்டியா விமான விபத்து: தீயணைப்பு வாகனத்தில் எச்சரிக்கை கருவிகள் இல்லாமை அம்பலம்!

நியூயோர்க்கின் லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில் ஏர் கனடா (Air Canada) விமானமும் தீயணைப்பு வாகனமும் மோதிக்கொள்வதற்கு சில நொடிகள் முன்பு, ஓடுபாதை எச்சரிக்கை அமைப்பு (Runway Warning System) செயல்படத் தவறியுள்ளதாக ஃபெடரல் புலனாய்வாளர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் (NTSB) தலைவர் ஜெனிபர் ஹொமெண்டி (Jennifer Homendy) இது குறித்துக் கூறுகையில், தீயணைப்பு வாகனத்தில் டிரான்ஸ்பாண்டர் (Transponder) எனப்படும் சிக்னல் கருவி இல்லாததே இந்த எச்சரிக்கை அமைப்பு வேலை செய்யாமல் போனதற்குக் காரணம் எனத் தெரிவித்தார்.

விமான நிலையப் பகுதியில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் டிரான்ஸ்பாண்டர்கள் இருக்க வேண்டும் என்று NTSB இதுவரை கட்டாயப்படுத்தவில்லை. எனினும், பாதுகாப்பு கருதி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு இவ்வாறான தகவல்கள் கிடைப்பது அவசியம் என ஹொமெண்டி வலியுறுத்தினார்.

70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியதில், இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். பல பயணிகள் காயமடைந்தனர். ஒரு விமானப் பணிப்பெண் தனது இருக்கையோடு ஓடுபாதையில் தூக்கி வீசப்பட்டும் உயிர் தப்பியது ஆச்சரியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

விமானம் தரையிறங்குவதற்கு வெறும் 20 நொடிகள் இருந்தபோது, அது சுமார் 100 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த வேளையில், கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தீயணைப்பு வாகனத்தை ஓடுபாதையைக் கடக்க அனுமதித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க அரசாங்க முடக்கம் (Government Shutdown), பனிப்புயல் மற்றும் அதிகரித்து வரும் செலவுகளால் ஏற்கனவே விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தினால் செவ்வாய்க்கிழமை லாகார்டியா விமான நிலையத்தின் கால்வாசி விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன் விமானங்கள் சராசரியாக 4 மணிநேரம் வரை தாமதமாகின.

விமானத்தின் கூரையை வெட்டி அதன் கருப்பு பெட்டி (Flight Data Recorder) மற்றும் குரல் பதிவு கருவி (Cockpit Voice Recorder) மீட்கப்பட்டுள்ளன. ஓடுபாதையில் சிதறிக் கிடக்கும் பாகங்களைச் சேகரிக்க இன்னும் சில நாட்கள் எடுக்கும் என்பதால் அந்த ஓடுபாதை மூடப்பட்டிருக்கும்.

மொண்ட்ரியலில் இருந்து வந்த இந்த விமானத்தில் 72 பயணிகளும் 4 பணியாளர்களும் இருந்தனர். தீயணைப்பு வாகனத்தில் இருந்த இருவர் உட்பட 40 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். லாகார்டியா விமான நிலையத்தில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த முதலாவது உயிரிழப்பு விபத்து இதுவாகும்.