புதிய முனையைத் திறந்த யேமனின் ஹூதிகள்!

மோதல் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் மீது மேலும் பல தாக்குதல்களை நடத்துவோம் என யேமனின் ஹூதி குழு உறுதியளித்துள்ளது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் முதன்முறையாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சனிக்கிழமை அன்று 24 மணித்தியாலங்களுக்குள் இரண்டு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை அவர்கள் முன்னெடுத்தனர்.

"பாலஸ்தீனம், லெபனான், ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் எதிர்ப்பு முன்னணிகளுக்கு" ஆதரவாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாக ஹூதிகள் தெரிவித்தனர்.

ஹோர்முஸ் நீரிணை ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள நிலையில், ஹூதிகள் செங்கடலில் உள்ள 'பாப் அல்-மண்டப்' (Bab al-Mandeb) நீரிணையை முடக்கி, இஸ்ரேலின் வர்த்தகப் பாதைகளைச் சீர்குலைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஈரான் மீது கடந்த 24 மணித்தியாலங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போர் தொடங்கியதில் இருந்து ஈரானில் 1,937 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இதில் 230 குழந்தைகள் அடங்குவர். 93,000 க்கும் மேற்பட்ட சிவில் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக ஈரானின் பிறை நிலா சங்கம் தெரிவித்துள்ளது.

தெஹ்ரானில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. மார்ச் 2 முதல் அங்கு 1,189 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்களும், ஒன்பது மருத்துவப் பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார். எனினும், இதற்கான காலக்கெடுவை மேலும் 10 நாட்களுக்கு அவர் நீடித்துள்ளார்.

ஈரானுடனான மோதலைத் தீர்க்க அமெரிக்கா 15 அம்சத் திட்டமொன்றை முன்வைத்துள்ளது. இதற்கு ஈரான் விரைவில் பதிலளிக்கும் என அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இஸ்லாமாபாத்தில் கூடி இந்த நெருக்கடி குறித்து ஆலோசிக்க உள்ளனர்.