Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

எரிவாயு பற்றாக்குறையால் மும்பை, குஜராத் தொழிற்சாலைகள் மூடல்!

எரிவாயு பற்றாக்குறையால் மும்பை, குஜராத் தொழிற்சாலைகள் மூடல்!

புதுடெல்லி: எரிவாயு சிலிண்டர் பற்றக்குறையால் ராஜஸ்தான், மும்பை மற்றும் குஜராத்தின் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அங்கு பணியாற்றியவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர்.

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரின் தாக்கம் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. எல்பிஜி எனும் எரிவாயு நெருக்கடியானது தொழில்துறை முதல் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை வரை அனைத்தையும் சீர்குலைத்து வருகிறது.

ராஜஸ்தானில், வர்த்தக எரிவாயு பற்றாக்குறையால் ஜவுளி, பளிங்குக் கற்கள் மற்றும் ரசாயனத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் வேலைகளை இழந்து சொந்த ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

மும்பையில், ஒரு சிலிண்டருக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். மேலும், கள்ளச்சந்தை விற்பனை காரணமாக அதன் விலை இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

குஜராத்தின் சூரத் நகரில், கடுமையான எரிவாயு பற்றாக்குறை காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பெருமளவில் வெளியேறுவதற்கு வழிவகுத்துள்ளது. சமைப்பதே கடினமாகிவிட்ட நிலையில், நகரில் தங்குவதில் அர்த்தமில்லை என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இவற்றை அரசின் புள்ளிவிவரங்கள் மறுத்து வந்த போதிலும், கள நிலவரம் மிகவும் மோசமாகவே உள்ளது. வளைகுடா நாடுகளில் நடக்கும் மோதல்களின் விளைவுகள் ராஜஸ்தானிலும் ஏற்பட்டு வருகிறது.

ராஜஸ்தானில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இது கரோனா கால சூழலை உருவாக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர்கள் இல்லாததால், எஞ்சிய தொழிலாளர்களும் உணவு நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் பிஹார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு திரும்புவதற்காக, தொழிலாளர்கள் முகாமிட்டுள்ளனர்.

அதனால் ரயில்களில் இயல்பை காட்டிலும் கூட்டம் குவிகிறது. தொழிற்சாலை மூடலால், பெரும்பாலான தொழிலாளர்களும் தங்கள் குடும்பங்களுடன் சொந்த ஊர் திரும்புகின்றனர்.

இந்தப் போர் எப்போது முடிவடையும் என்று தெரியாததால், தொழிலாளர்கள் தங்கள் உடமைகளுடன் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்த நெருக்கடி நிலை போர் முடிவிற்கு வரும் வரை முடிவடையும் சூழலில் இல்லை எனத் தெரிகிறது.