இல்ஹான் ஓமாரை நாடு கடத்துமாறு சோமாலிலாந்து கோரியதாக ஊடகங்கள் தவறான செய்தி வெளியீடு!

இல்ஹான் ஓமாரை நாடு கடத்துமாறு சோமாலிலாந்து கோரியதாக ஊடகங்கள் தவறான செய்தி வெளியீடு!

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் இல்ஹான் ஓமாரை (Ilhan Omar) நாடு கடத்துமாறு சோமாலிலாந்து அரசாங்கம் கோரியதாகப் பல செய்தி நிறுவனங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளன.

சோமாலிலாந்து அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு 'X' (ட்விட்டர்) கணக்கில் வெளியான பதிவையே இந்த ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தன.

ஃபொக்ஸ் நியூஸ் (Fox News), நியூயோர்க் போஸ்ட் (New York Post) மற்றும் இன்டிபென்டென்ட் (Independent) போன்ற ஊடகங்கள் இந்தப் செய்தியை வெளியிட்டன.

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance), இல்ஹான் ஓமார் குடிவரவு மோசடியில் ஈடுபட்டதாக முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, @RepOfSomaliland எனும் 'X' கணக்கில் ஒரு பதிவு வெளியானது.

அதில், "நாடு கடத்துவதா? இளவரசியை மீண்டும் அவரது ராஜ்யத்திற்கே அனுப்புகிறீர்கள். ஒரு வார்த்தை சொல்லுங்கள்..." எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த 'X' கணக்கு சோமாலிலாந்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கணக்கு அல்ல என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு 'தி கார்டியன்' (The Guardian) இதழுக்குத் தெரிவித்துள்ளது.

தகவல்களின் துல்லியத்தை உறுதிப்படுத்த அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஊடகங்களை மட்டுமே பின்பற்றுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜே.டி. வான்ஸ் மற்றும் ஸ்டீபன் மில்லர் ஆகியோர் இல்ஹான் ஓமார் மீது குடிவரவு மோசடி வழக்குகளைத் தொடர முயற்சிப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், ஓமார் தரப்பு இதனை "அப்பட்டமான பொய்" என மறுத்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் சோமாலியாவை ஒரு "ஊழல் நிறைந்த, அருவருப்பான நாடு" என விமர்சித்துள்ளதோடு, மினசோட்டாவை "சோமாலியாவிடமிருந்து மீட்டெடுப்போம்" என்றும் பேசியுள்ளார்.

இவ்வாறான பேச்சுக்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை "மனிதத்தன்மையற்ற முறையில்" (Dehumanization) சித்தரிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கள் காரணமாகத் தனக்குக் கொலை அச்சுறுத்தல்கள் வருவதாக இல்ஹான் ஓமார் கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மினசோட்டாவில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் மீது திரவம் தெளித்துத் தாக்குதல் நடத்திய 55 வயது நபர் ஒருவர் மீது தற்போது கூட்டாட்சி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.