இலங்கைக்கு விஜயம் செய்துள்ள IMF தூதுக்குழு, ஜனாதிபதி, கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள IMF தூதுக்குழு, ஜனாதிபதி, கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் இன்று (2) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.

அண்மைய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் இதுவரை எட்டப்பட்டுள்ள சாதகமான முடிவுகள் குறித்து ஜனாதிபதியுடன் பிரதிநிதிகள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இதன்போது பாராட்டியுள்ளனர்.

குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைதல், முறையான வருமான முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டு கையிருப்புகளை வலுப்படுத்துவதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக மாறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து பேணுவதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றும் விதம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் விலை மற்றும் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் தாக்கங்களையும் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த வெளிப்புற சவால்களுக்கு மத்தியிலும், எட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டு, மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தைச் சீராக முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தமது நன்மதிப்பைத் தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பணிக் குழுத் தலைவர் இவான் பாபஜார்ஜியு உட்பட அதன் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக் குழுவினர் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்களை இன்று (02) சந்தித்தனர்.

2026 மார்ச் 26ஆம் திகதி முதல் ஏப்ரல் 8ஆம் திகதிவரை சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில் பாராளுமன்றத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி பிரிவுத் தலைவர் இவான் பாபர்ஜயோஜியோ மற்றும் சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பொருளியலாளர்களும் இத்தூதுக் குழுவில் அடங்கியிருந்தனர்.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவுடன் இடம்பெற்ற சந்திப்பில், இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை சபாநாயகர் பாராட்டினார்.

பத்தாவது பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வலுவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சட்டவாக்கமாக அமைந்துள்ளது என்றும், இயலாமையுடைய சமூகம் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டவாக்கமாகவும் அமைந்துள்ளது எனவும் வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்திற்கு இலங்கை முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை மீள் உறுதிப்படுத்திய சபாநாயகர், வலுவான நிதியியல் மற்றும் பணக் கொள்கையைப் பேணுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பொது நிதி முகாமைத்துவச் சட்டம், ஊழல் எதிர்ப்புச் சட்டம் போன்ற முக்கிய சட்டங்களை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட அவர், நிதி ஒழுக்கத்தையும் நல்லாட்சியையும் உறுதி செய்வதற்கு இந்தக் கட்டமைப்புகள் முக்கியமானவை என்றும் தெரிவித்தார்.

பொது நிதி வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவதற்கும், இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதியான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக பாராளுமன்ற கற்கை நிலையமொன்றை அமைப்பதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

இந்தத் திறன் விருத்தி முயற்சிகளில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பையும் அவர் கோரியிருந்தார்.

நீடிக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் இலங்கையின் செயற்பாடுகளில் வலுவான நிலையில் இருப்பதாகவும், நாடு பொருளாதார ரீதியில் சாதகமான பாதையில் பயணித்து வருவதாகவும் இவான் பாபர்ஜயோஜியோ தெரிவித்தார்.

சட்டவாக்கம் மற்றும் கொள்கைகளை மேற்பார்வை செய்வதில் பாதுகாவலன் என்ற ரீதியில் பாராளுமன்றத்தின் வகிபாகத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நிலைபேறான மறுசீரமைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலையினால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக் கூடிய தாக்கம், தித்வா புயல் தாக்கத்தின் பின்னரான நிவாரணம், மீட்சி மற்றும் மீள்கட்டுமான முயற்சிகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடான சந்திப்பிலும் சர்வதேச நாணய ஒன்றியத்தின் தூதுக் குழுவினர் கலந்துகொண்டனர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, திலித் ஜயவீர, (கலாநிதி) எம்.எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில், புயல் தாக்கத்திலிருந்தான மீட்சியில் காணப்படும் சவால்கள் மற்றும் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் உள்ளிட்ட தற்போதைய பொருளாதாரச் சூழல் குறித்து கட்சித் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

வரிகளை சீர்செய்தல், பணவீக்க முகாமைத்துவம், வெளிவாரியான அழுத்தங்கள் மற்றும் பேரண்டப் பொருளாதாரத்தின் நிலைப்புத் தன்மையை உறுதி செய்வதற்கான நீடித்த கட்டமைப்பு சீர்திருத்தங்களின் தேவை போன்ற முக்கிய விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டன.

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக் குழுவினருக்கு பாராளுமன்றத்தில் சுற்றுப் பயணமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.