கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று அதிகாலை 21 கிலோகிராம் மற்றும் 779 கிராம் எடையுள்ள "குஷ்" வகை கஞ்சா போதைப்பொருளுடன் 42 வயதுடைய கனேடிய பிரஜை ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் (PNB) கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விசேட பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
தாய்லாந்தின் பெங்கொக் (Bangkok) நகரில் இருந்து வருகை தந்த குறித்த சந்தேகநபர், வருகை முனையத்தில் (Arrival Terminal) வைத்து மறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
சந்தேகநபரின் பயணப் பொதிகளை விரிவாகச் சோதனையிட்ட போது, பல கொள்கலன்களுக்குள் (Containers) மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த "குஷ்" வகை கஞ்சா போதைப்பொருள் கண்டறியப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த எடை 21 கிலோகிராம் 779 கிராம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கனேடிய பிரஜை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளார்.