ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படத் தொகுப்பை நாசா (NASA) நிறுவனம் இன்று (03) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
நாசா தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் "அது நாங்கள்!" (That's us!) என்ற தலைப்புடன் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது.
1972ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகச் சந்திரனை நோக்கிப் பயணிக்கும் 'ஓரியன்' (Orion) விண்கலம், தனது பயணத்தின் முதல் நாளில் பூமியின் சுற்றுப்பாதையில் தங்கியிருந்தது.
விண்கலத்தின் உயிர் காக்கும் அமைப்புகள் (Life support systems) மற்றும் காற்று அமைப்புகள் சரியாகச் செயற்படுகின்றனவா என்பதைப் பரிசோதிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விண்கலம் ஏவப்பட்ட சில மணிநேரங்களிலேயே அதன் கழிவறை அமைப்பில் (Toilet system) ஒரு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. எனினும், பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் உதவியுடன் விண்வெளி வீரர்கள் அந்தப் பிரச்சினையை வெற்றிகரமாகச் சரிசெய்தனர்.
தற்போது விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து விலகி, சந்திரனை நோக்கிய திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. நான்கு விண்வெளி வீரர்களும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், விண்கலம் சீராக இயங்குவதாகவும் நாசா அறிவித்துள்ளது.
பயணத்தின் முதல் நாள் இறுதியில் விண்வெளி வீரர்கள் வீடியோ அழைப்பு மூலம் நாசாவுடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இன்னும் நான்கு நாட்களுக்குள் விண்கலம் சந்திரனுக்கு மிக அருகில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.