ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடான போக்குவரத்தை தாம் நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளதையடுத்து, தற்போது நடைமுறையிலுள்ள பலவீனமான போர் நிறுத்த உடன்படிக்கை முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டிற்கு மத்தியில், ஈரான் இன்று (08) மாலை ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடியுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையில் போர்நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் நடவடிக்கை எடுத்திருந்தது.
இருப்பினும், இஸ்ரேல் லெபனான் மீது நடத்தி வரும் பாரிய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு இந்தத் தடையை விதித்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அனுமதியின்றி பயணிக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் அழிக்கப்படும் என்றும் பாரசீக வளைகுடாவில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களுக்கு ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னணி கப்பல் தரகர் நிறுவனமான 'SSY' அமைப்பும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் பாரசீக வளைகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு வானொலிச் செய்திகள் (Radio messages) மூலம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று, இந்த நீரிணை ஊடாக எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் பயணிக்க அனுமதிப்பதாகும்.
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் இணைந்த 'Fars' செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின்படி, இன்று (08) காலை ஈரானின் அனுமதியுடன் இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் பயணித்த போதிலும், அதன் பின்னர் அந்தப் பாதையில் கப்பல் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்த பின்னர், இன்று மிகப்பெரிய தாக்குதலை நடத்தியிருந்தது. இது தரைவழித் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் லெபனான் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும். இந்தத் தாக்குதலில் இதுவரை லெபனானில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பிராந்திய அமைதி ஒப்பந்தங்கள் முறியும் பாரிய அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
“ஈரான் ஒப்பந்தத்தின் விடயங்கள் இரகசியமானவை”
இதற்கிடையில், ஈரானுடன் எட்டப்பட்ட உடன்பாடு குறித்து பரப்பப்படும் பல்வேறு பொய்யான கூற்றுகளை விமர்சித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான விடயங்கள் "மூடிய கதவுகளுக்குப் பின்னால்" (Behind closed doors) இரகசியமாக விவாதிக்கப்படுவதாக அவர் அங்கு வலியுறுத்தியுள்ளார்.
தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாத நபர்களால் பரப்பப்படும் ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து ஜனாதிபதி டிரம்ப் இங்கு கடுமையாக சாடியுள்ளார்.
"அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாத நபர்கள் பல்வேறு ஒப்பந்தங்கள், பட்டியல்கள் மற்றும் ஆவணங்களை முன்வைத்து வருகின்றனர். பல சந்தர்ப்பங்களில் அவர்கள் முற்றிலும் மோசடி செய்பவர்கள்," என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா ஏற்றுக்கொண்ட "முக்கியமான விடயங்கள்" தொடர்பான குழு விவாதங்கள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும், போர்நிறுத்தத்திற்கு உடன்படுவதற்கான அடிப்படை அந்த விடயங்களே என்றும் அவர் கூறுகிறார்.
இருப்பினும், அந்த "முக்கியமான விடயங்கள்" என்ன என்பது குறித்து ஜனாதிபதி தனது பதிவில் தெளிவான விளக்கம் எதனையும் அளிக்கவில்லை.