ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திறந்திருக்கும் பட்சத்தில் மட்டுமே ஈரானுடனான போர் நிறுத்தம் தொடரும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மிக முக்கியமான இந்த நீர்வழிப் பாதையூடான எண்ணெய் தாங்கிக் கப்பல்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த பின்னணியில் வெள்ளை மாளிகை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
ஒரு பலவீனமான போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், மிக முக்கியமான இந்த நீர்வழிப் பாதையூடாகக் கப்பல்கள் செல்ல அனுமதிப்பதாக ஈரான் உறுதியளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இருப்பினும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக ஈரான் மீண்டும் இந்த ஜலசந்தியை மூடியுள்ளதாக வெளியாகும் செய்திகளுக்கு மத்தியிலேயே வெள்ளை மாளிகை இதனைத் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கிய பின்னர் லெபனான் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ஒருங்கிணைந்த தாக்குதலைத் தாம் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.
லெபனான் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 112 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
ஈரானுடனான இரண்டு வார கால போர்நிறுத்த உடன்படிக்கையில், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் "உள்ளடக்கப்படவில்லை" (Not included) என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று விவரித்துள்ளார்.
போர்நிறுத்தத்தின் நிபந்தனைகள் "தெளிவானவை மற்றும் வெளிப்படையானவை" என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
இந்த அமைதி நிலையைத் தொடர்ந்து பேணுவதா அல்லது இஸ்ரேல் ஊடாகத் தொடர்ச்சியான போரை முன்னெடுப்பதா என்பதை வொஷிங்டன் தீர்மானிக்க வேண்டும் என அவர் வாதாடியுள்ளார்.
ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காகத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance), விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் வரும் சனிக்கிழமை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்குச் செல்லவுள்ளனர்.
லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள் தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியல்ல
லெபனான் மீதான மிகப்பெரிய தாக்குதல்களை இஸ்ரேல் ஆரம்பித்துள்ள நிலையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட பலவீனமான இரண்டு வார கால போர்நிறுத்த உடன்படிக்கையில் லெபனான் உள்ளடக்கப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
"லெபனான் போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியல்ல. இது போர்நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்குத் தெரிந்தபடி, பிரதமர் நெதன்யாகு நேற்று இரவு போர்நிறுத்தத்திற்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அத்துடன் அடுத்த இரண்டு வார காலப்பகுதியில் பயனுள்ள பங்காளியாகத் தொடர்ந்து செயற்படுவதாக அவர் ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார்," என ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எதிர்கால உடன்படிக்கையொன்றில் லெபனானை உள்ளடக்க ஜனாதிபதி விரும்புவாரா என்று கேட்கப்பட்டபோது, டிரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோருக்கு இடையில் இதற்கான உரையாடல்கள் தொடரும் என்று லீவிட் குறிப்பிட்டார்.
"ஜனாதிபதிக்கும் பிரதமர் நெதன்யாகுவிற்கும் இடையிலும், அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இடையிலும் இது குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால் இந்த நேரத்தில், அவர்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை," என்று லீவிட் மேலும் கூறினார்.
முன்னதாக புதன்கிழமை கருத்துத் தெரிவித்த டிரம்ப், லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களை ஹிஸ்புல்லாவுடனான ஒரு "தனிப்பட்ட மோதல்" (Separate skirmish) என்று விவரித்ததுடன், அது இரண்டு வார போர்நிறுத்த ஒப்பந்தத்தில் "உள்ளடக்கப்படவில்லை" என்றும் குறிப்பிட்டிருந்தார்.