தேசிய மக்கள் சக்தியின் (NPP) முன்னணித் தலைவர்களில் ஒருவரான கே.டி. லால்காந்த, அண்மையில் பொதுமக்களிடம் நிதி சேகரிப்பது மற்றும் 'சமூக மூலதனம்' (Social Capital) குறித்து வெளியிட்ட கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளன.
ஓர் அரசியல் இயக்கத்திற்கு மக்கள் தன்னிச்சையாக நிதி வழங்குவதென்பது வெறும் பொருளாதார நடவடிக்கை மட்டுமல்ல; அது அந்த இயக்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
சமூக மூலதனம் என்பது, ஒரு சமூகத்தில் உள்ள மக்களுக்கிடையிலான உறவுப் பிணைப்பாகும். இது பிரதானமாக வலையமைப்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகிய மூன்று தூண்களில் தங்கியுள்ளது. பணத்தைப் போன்றல்லாது, இது மனித உறவுகளால் கட்டியெழுப்பப்படும் ஓர் அருவமான சொத்தாகும்.
பிரான்ஸ் நாட்டு சமூகவியலாளர் பியரி போர்டியுவின் கருத்துப்படி, சமூக மூலதனத்தை பொருளாதார மூலதனமாக (பணமாக) மாற்ற முடியும். லால்காந்த சுட்டிக்காட்டியது போல, மக்களிடம் நிதி சேகரிக்க முடிவதென்பது, கட்சியிடம் உள்ள 'சமூக நம்பிக்கையை' 'பொருளாதார பெறுமதியாக' மாற்றும் ஒரு நடைமுறைச் செயற்பாடாகும்.
சமூக மூலதனம் என்பது தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டு ஒற்றுமையைக் குறிக்கும். தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் இதன் நேரடி உதாரணங்களாகும்.
இது வர்த்தகத் தொடர்புகள் மற்றும் வாடிக்கையாளர் விசுவாசம் எனப் பார்க்கப்படுகிறது. லால்காந்தவின் கருத்துக்கள் இந்த முதலாளித்துவ சூழலுக்குள் சமூக மூலதனத்தை எவ்வாறு கையாள்வது என்பதையே பிரதிபலிக்கின்றன.
ஒரு நபர் தொழிலைத் தொடங்கினாலும் அல்லது சமூக அநீதிக்கு எதிராகப் போராடினாலும், அவர் தனித்து வெற்றி பெற முடியாது. அவர் கட்டியெழுப்பும் நேர்மறையான சமூக உறவுகளே (சமூக மூலதனம்) அவரது வெற்றியைத் தீர்மானிக்கின்றன.
தேசிய மக்கள் சக்தி, ஜே.வி.பியின் பலமான அடித்தளத்தைப் பயன்படுத்தி, மக்களின் நம்பிக்கையை ஓர் அரசியல் சக்தியாகவும் நிதிப் பலமாகவும் மாற்றுவதில் வெற்றி கண்டுள்ளது. இது நவீன டிஜிட்டல் முதலாளித்துவ யுகத்தில் ஒரு புதிய அரசியல் மூலோபாயமாகப் பார்க்கப்படுகிறது.
கே.டி. லால்காந்தவின் இல்லம் தொடர்பான சர்ச்சை சமூக வலைத்தளங்களில் தீவிரமடைந்துள்ளது. லால்காந்த நீண்டகாலமாக ஜே.வி.பியின் முழுநேரப் பணியாளராகப் பணியாற்றி ஈட்டிய 'சமூக மூலதனத்தின்' விளைவாகவே இல்லத்தைப் பெற்றுக்கொண்டார் என்பதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.
3 சதவீத வாக்குகளைக் கொண்டிருந்த ஒரு கட்சியை 159 ஆசனங்களைக் கொண்ட பலமான சக்தியாக மாற்றியது வேட்பாளர்களின் தனிப்பட்ட தகுதியை விடவும், அநுர, லால்காந்த, விஜித ஹேரத் மற்றும் ஹரிணி போன்றவர்களின் சமூக மூலதனமே காரணமாகும்.
லால்காந்தவின் நீண்டகால அர்ப்பணிப்பை ஏற்க மறுக்கும் அரசியல் எதிரிகள், அவருக்கு எதிராகத் தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர். எவ்வாறாயினும், பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றவர்களுக்கு உயர்மட்ட சமூகத்தினர் வாகனங்கள் மற்றும் வீடுகளை வழங்குவது போன்று, லால் காந்தவுக்கும் அத்தகைய சமூக ஆதரவு கிடைப்பதில் வியப்பில்லை.
லால்காந்த தனது விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுப் பதவிகளைப் பயன்படுத்தி, அரச காணிகளை முறைகேடாக வழங்கியோ அல்லது உரக் கொள்வனவு ஒப்பந்தங்களில் (Tenders) ஊழல் செய்தோ இந்தச் சொத்துக்களை ஈட்டியிருந்தால் மாத்திரமே அவர் தண்டிக்கப்பட வேண்டியவர். ஆனால், தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் சமூக உறவுகள் ஊடாக அவருக்குக் கிடைத்த உதவிகள் ஊழலாகக் கருதப்பட முடியாது.
ஜே.ஆர். ஜெயவர்தனவினால் 1978இல் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ், எவரும் எதிர்பாராத வகையில் 125 இற்கும் மேற்பட்ட புதிய முகங்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர். இவர்களின் வெற்றிக்குக் கட்சியின் முக்கிய தலைவர்கள் மக்கள் மத்தியில் கொண்டுள்ள நம்பிக்கையே பிரதான காரணியாகும்.
லால்காந்த ஒரு கறாரான அரசியல்வாதியாகத் தெரிந்தாலும், அவர் ஜே.வி.பிக்குள் இருக்கும் மிகச் சிறந்த பண்புகளைக் கொண்டவர். ரணில் விக்ரமசிங்கவின் விவகாரம் எவ்வாறு ஓர் அரசியல் வேட்டையாகப் பார்க்கப்படுகிறதோ, அதேபோன்று லால் காந்த மீதான இந்தத் தாக்குதல்களும் அநீதியானவை என்பதே பலரின் நிலைப்பாடாகும்.