இஸ்ரேல் லெபனான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, இந்த வார இறுதியில் பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் நடைபெறவிருந்த திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு ஈரானிய பேச்சுவார்த்தைக் குழு இன்னும் புறப்படவில்லை என ஈரானைத் தளமாகக் கொண்ட மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வு மையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் அப்பாஸ் அஸ்லானி (Abas Aslani) தெரிவித்துள்ளார்.
"ஈரானிய தூதுக்குழு தெஹ்ரானில் இருந்து இன்னும் புறப்படவில்லை. லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடரும் வரை, இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என ஈரானியத் தரப்பு கூறி வருகிறது," என்று அஸ்லானி குறிப்பிட்டார்.
"லெபனான் மீதான தாக்குதல்கள் தொடர்வது, பேச்சுவார்த்தைகள் குறித்த நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளதை இது காட்டுகிறது," என்று அவர் அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.
"கூடுதலாக, அமெரிக்க ஜனாதிபதியால் கூட ஒரு செயற்படுத்தக்கூடிய கட்டமைப்பாகக் கருதப்பட்ட '10 அம்சத் திட்டம்' (10-point plan) தொடர்பாக அமெரிக்கத் தரப்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது ஈரானியர்களிடையே தற்போது ஒரு பெரும் 'நம்பிக்கைப் பற்றாக்குறையை' (Trust deficit) உருவாக்கியுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.
"ஈரான் நீண்டகாலமாக அமெரிக்காவை நம்பவில்லை. சமீபத்திய அரசியல் மாற்றங்கள் தெஹ்ரானில் பழைய அச்சத்தைத் தூண்டுகின்றன. அதாவது, அமெரிக்காவின் வாக்குறுதிகளை நம்ப முடியாது என்பதே அதுவாகும்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"பேச்சுவார்த்தைகளின் மத்தியிலேயே ஈரான் இரண்டு முறை தாக்கப்பட்ட நிலையில், ஏன் மீண்டும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறீர்கள் என்று ஈரானியப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தூதுக்குழுவிற்கு அழுத்தம் ஏற்படவும் இது வாய்ப்பளிக்கிறது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.