மறு அறிவித்தல் வரும் வரை அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தும் எண்ணம் ஈரானிடம் இல்லை என அந்நாட்டின் அரசுடன் இணைந்த 'பார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம், பேச்சுவார்த்தைக் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
"ஈரான் எந்த அவசரத்திலும் இல்லை. அமெரிக்கா ஒரு நியாயமான உடன்படிக்கைக்குச் சம்மதிக்கும் வரை, ஹோர்முஸ் ஜலசந்தியின் (Strait of Hormuz) தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இருக்காது"
என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்லாமாபாத்தில் இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்த முடிவு ஈரானுக்கு 'மோசமான செய்தி' என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கூறியிருந்த நிலையில், ஈரானின் முன்னாள் துணை ஜனாதிபதி அதாவுல்லா மொஹஜெரானி, "இதைவிட மோசமான செய்தி அமெரிக்காவிற்கே" எனத் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்காவே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது, மத்தியஸ்தரை ஏற்பாடு செய்தது மற்றும் பேச்சுவார்த்தைக்கான ஈரானின் பத்து நிபந்தனைகளுக்கும் உடன்பட்டது. ஆனால், போர்க்களத்தில் அடைய முடியாததை பேச்சுவார்த்தை மேசையில் அடைய அமெரிக்கா முயற்சித்தது"
என மொஹஜெரானி குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய தூதுக்குழு நள்ளிரவு அளவில் இஸ்லாமாபாத்திலிருந்து புறப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.