தமிழர்கள் தமிழர்களாகவே தன்மானத்தோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள்

எஸ்.ஆர்.லெம்பேட்

(3-05-2025)

 

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு  வாக்களியுங்கள் .அவர்களுக்குள் இருப்பது குடும்பச் சண்டை விரைவில் தீர்ந்துவிடும்.அந்தச் சண்டைக்குள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தால் வடக்கு கிழக்கில் நாம் தனித்துவத்தையும்  சுயமரியாதையும் இழந்தவர்களாகி விடுவோம்.

தமிழர்கள் தமிழர்களாகவே தன்மானத்தோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள். அதுவே எமக்கான வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் தார்மீக உரிமையும் ஆகும் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (3) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

 

கடந்த 70 ஆண்டுகளாக மாறி மாறி பல தேர்தல் மூலம் பல கட்சிகள் ஆட்சிக்கு  வந்துவிட்டன ஆனால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை நலிவடைந்தே போகின்றது.காலத்துக்கு காலம் ஆட்சியாளர்கள் பல்வேறு விதமான வாக்குறுதிகளை வழங்கி தமிழ்த் தலைவர்களை ஏமாற்றியதும் தமிழ் மக்களை ஏமாற்றியதுமே வரலாறாக நீள்கின்றன.

பன்னாட்டு அனுசரணையோடு செய்யப்பட்ட பல ஒப்பந்தங்களையும் காற்றில் பறக்க விட்டதே அரசின் தொடர்கதை.

அரசாங்கம் தொடர்ந்து நிலப்பறிப்பு,குடிப்பரம்பல் மாற்றம், மொழிச் சிதைப்பு ,பண்பாட்டுச் சீரழிப்பு ,இனத்துவ ஏகாதிபத்திய அடக்குமுறை ,இனவாத வகுப்புவாத சிந்தனை, அரச திணைக்களங்கள் மூலம் நில அபகரிப்பு போன்ற பல்வேறு விதமான நெருக்கடிகளை தொடர்ந்து ஆட்சிக்கு வருபவர்களால் அரங்கேற்றப்படுகிறது.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை சிறு பான்மையினராக்கும் முயற்சியிலே அரசாங்கம் முன் நோக்கி நகர்கின்றது.

ஆட்சி அமைக்கின்ற எவரும் பௌத்த தேசியவாத மனநிலையில் இருந்தும் சிங்கள மேட்டிமை வாத  சிந்தனையில் இருந்தும் தங்களை மாற்றிக் கொள்ள தயாராகவில்லை.

பௌத்த தேசிய இனவாதத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்துவதனால் தான் சமூக, சமநீதி, சமத்துவம், இனத்துவ மொழித்துவ வேறுபாடின்மை போன்ற விடயங்களை குறைந்தபட்ச மேனும் நோக்கு நிலையாக கொள்வதில்லை.

பௌத்த பீடங்களை திருப்திப்படுத்தவும் இராணுவத்தை மகிழ்ச்சிப்படுத்தவும் சிங்கள அடிப்படை வாதிகளை சாந்தப்படுத்தும் வேலையிலுமே ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய அரசும் இதுக்கு விதிவிலக்கு அல்ல .ஆட்சிக்கு வர முன்னர் பல்வேறு விதமான இடதுசாரி தத்துவத்தை முன் வைத்தவர்கள் ஆட்சிக் கதிரையில் அமர்ந்த பின்னர் இயல்பான இனவாத வலதுசாரி வகுப்பு வாதிகளாக மாறி விட்டார்கள்.

நடைமுறைச் சாத்திய மற்ற வாக்குறுதிகளை எல்லாம் தாராளமாக அள்ளி வீசியவர்கள் அதில் ஒரு சிலதை கூட நடைமுறைப்படுத்த முடியாமல் திணறுகிறார்கள்.ஜே.வி.பி யில் இருந்து என்.பி .பி என பெயரை மாற்றிக் கொண்டால் கடந்த காலத்து இனவாத சக்திகள் எதனையும் இன்றைய இளைய சமூகம் அறிந்திருக்காது என் கின்ற அற்ப ஆசையிலே இத் தந்திரத்தை உபயோகிக்கிறார்கள்.

அது தொடர்ந்தும் வெற்றியை நோக்கி முன் னகர்துமா என்பது கேள்விக்குறியே!இலங்கையிலே இனவாதத்தை பட்டவர்த்தனமாக பொது வெளியிலே சிங்கள மக்கள் மத்தியிலே வெறுப்புணர்வை தூண்டி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பகைமையை ஏற்படுத்தியதில் மிகப்பெரிய பங்காற்றியவர்கள் ஜே.வி.பியினர் என்பது மறக்க முடியாத கடந்த கால வரலாறு.

பெயரை மாற்றி விட்டால் மக்கள் மறந்து விடுவார்கள் என எண்ணுகிறார்கள் போலும் வடக்குக் கிழக்கில் அரச ஒட்டுக் குழுக்களாக இருந்தவர்கள் இப்பொழுது ஜன நாயகவாதிகளாக தங்களை காட்டிக் கொள்வது போல் தான் இவர்களுடைய மாய விம்பமும் தோன்றுகின்றது.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்ட போதும் உருப்படியாக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சர்களும் பொய்யும் புரட்டுமாக பேசி வாக்கை தமதாக்கிக் கொள்ள முனைகிறார்கள்.மக்களே விழித்துக் கொள்ளுங்கள். தமிழின அழிப்பாளர்களான ராஜபக்சக்களின் அடக்குமுறையை கூட துணிச்சலாக எதிர்கொண்ட தமிழ் மக்கள் ஜேவிபியின் என். பி .பி நாடகத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றோம்.

குறிப்பாக மன்னார் போன்ற பிரதேசங்களில் காற்றாலை மின்சாரம் ,கனிம மண் அகழ்வு ,கரையோர  மண்ணகழ்வு ஆகிய மூன்று திட்டங்களுக்கும் கொள்கை அளவில் அரசாங்கம் ஆதரவாகவே இருக்கிறது.இத்திட்டத்தை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிக்கலாமா?வடமராட்சி கிழக்கு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை 5940 ஏக்கரை கபளீகரம் செய்வதற்கு அரசாங்கம் முயல்கிறது இதை ஆதரிக்கலாமா?எனவே தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு  வாக்களியுங்கள் அவர்களுக்குள் இருப்பது குடும்பச் சண்டை அது விரைவில் தீர்ந்துவிடும்.

அந்தச் சண்டைக்குள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தால் வடக்கு கிழக்கில் நாம் தனித்துவத்தையும்  சுயமரியாதையும் இழந்தவர்களாகி விடுவோம்.நீண்ட நெடிய விடுதலைப் போரை நடத்திய இனம் வெறும் வாய்ச்சொல் வீரர்களுக்கு வாக்களிக்க முனைவது தேசத்துக்காக இழந்த எம்மவர்களின் ஆத்மா உங்களை ஒருபோதும் மன்னிக்காது.

ஆகவே தென்னிலங்கையில் யாரும் எவருக்கும் வாக்களிக்கட்டும்.

வடக்கு கிழக்கிலே எங்களை நாங்கள் ஆளக்கூடிய சுயநிர்ணய உரித்தை தகவமைத்துக் கொள்வதற்கு எமது இருப்பு எமக்கு முக்கியம் அற்ப  சொற்ப  சலுகைகளுக்கும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கும் உங்கள் வாக்கை அளித்து வாழ்க்கையையும் இருப்பையும் இழந்து விடாதீர்கள்.

வாக்களிக்க முன் நான் ஏன்  இவருக்கு வாக்களிக்க வேண்டும். அதனால் நம் இனத்துக்கும், எம் நிலத்துக்கும், என் பண்பாட்டிற்கும், அடுத்த சந்ததிக்கும்   நான் மதிப்பிடும் அரசியல் கணக்கு என்ன? என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் வாக்குச்சாவடிக்கு போக முன்னர் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

தமிழர்கள் தமிழர்களாகவே தன்மானத்தோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள். அதுவே எமக்கான வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் தார்மீக உரிமையும் ஆகும்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc