எம்.ஐ.அப்துல் நஸார்
காஸாவில் நிகழும் மனிதாபிமான பேரழிவினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், போர்நிறுத்தம் மற்றும் முற்றுகையை நீக்கவும் அழைப்பு விடுப்பதற்காக இலங்கையின் அனைத்து அரசியல் தலைவர்களும் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் ஒன்றுகூடினர். இங்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் பலஸ்தீன சுதந்திரக் கோரிக்கைக்கு இலங்கையின் முழு ஆதரவையும் தெரிவித்தனர்.
அரபு மொழியில் பேரழிவு என்று பொருள்படும் – ‘அல் நக்பா’வை நினைவுகூரும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர்கள் தங்கள் உறுதிமொழிகளை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
அல் நக்பா என்பது 1947 இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானம் 181 ஐத் தொடர்ந்து 1948 இல் இஸ்ரேல் தன்னை ஒரு சுதந்திர நாடாக அறிவித்ததற்கு சில மாதங்களுக்கு முன்னும் பின்னும் 500 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 750,000 பலஸ்தீனர்கள் இன அழிப்பு செய்யப்பட்டதைக் குறிக்கிறது.
ஹெக்டர் கோப்பெகடுவ விவசாய ஆராய்ச்சி மையத்தில் கூடியிருந்த ஏராளமானோர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, காஸாவில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் உணவு உதவி தடுக்கப்பட்டமை தொடர்பில் இலங்கையின் ஆழ்ந்த கவலையை தெரிவித்தார்.
‘காஸாவில் கூர்மையடைந்துவரும் மனிதாபிமான பேரழிவு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மார்ச் 2025 இல் முற்றுகை அமுல்படுத்தப்பட்டதிலிருந்து, அத்தியாவசிய உணவு, தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது, இது மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகளை முடக்கியுள்ளது. மிகவும் அதிர்ச்சியூட்டும் விதமாக, மார்ச் 18 அன்று வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பமானதிலிருந்து காஸாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 100 குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள் அல்லது காயமடைகிறார்கள் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு – குறிப்பாக குழந்தைகளுக்கு – எதிரான இந்த மட்டற்ற வன்முறை, மனசாட்சிக்கு விரோதமானது மற்றும் எந்தவொரு மனிதாபிமான தராதரத்தாலும் அல்லது சட்டத்தாலும் பொறுத்துக்கொள்ள முடியாது,’ என பிரதமர் தெரிவித்தார்.
சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில், நாடுகள் பார்வையாளர்களாக இருக்க முடியாது என அவர் தெரிவித்தார். ‘கடுமையான மீறல்கள் இடம்பெறுவதற்கான நம்பகமான சான்றுகள் வெளிப்படும் போது, மௌனம் காப்பது, அந்த மீறல்களுக்கு உடந்தையாக இருப்பதற்கு சமமாகும். பொறுப்புக்கூறலை உறுதி செய்தல், அப்பாவி உயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் பலஸ்தீன மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற கவலைகளை வெளிப்படுத்துவதைத் தாண்டி தீர்க்கமான நடவடிக்கை எடுப்பது நமது அவசரக் கடமையாகும். அதைவிடக் குறைந்த செயற்பாடுகள் எமது மனிதநேயத்தின் தோல்வியாக இருக்கும்,’ என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை சர்வதேச சமூகத்தையும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் நீடித்த தீர்வை அடைய புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக பிரதமர் கூறினார்.
‘வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற எமது கோரிக்கையை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். காஸாவிற்கு உணவு, எரிபொருள், மருந்து, மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை சுதந்திரமாக எடுத்துச் செல்ல உதவுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்,’ என அவர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகம் மற்றும் பலஸ்தீனத்துக்கான இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச பங்குபற்றினார்.
பலஸ்தீனப் பிரச்சினையை ஆதரிப்பதில் இலங்கையின் நீண்டகால உறுதிப்பாட்டை அவர் நினைவு கூர்ந்தார். அடுத்தடுத்த அரசாங்கங்கள், அவற்றின் அரசியல் சித்தாந்தத்தைப் பொருட்படுத்தாமல், பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.
‘இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து பிரதிநிதிகளும் பலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கருத்தில் உடன்பட்டு நிற்கின்றனர் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.’
பலஸ்தீனப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை விளக்கிய திரு. பிரேமதாச, பலஸ்தீன மக்கள் மீது பாகுபாடு காட்டுதல், ஓரங்கட்டுதல், துன்புறுத்தல் மற்றும் இலக்கு வைத்தல் ஆகியவற்றுக்கான இடைவிடாத முயற்சிகளை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்தார். ‘அவர்களின் பிரிக்க முடியாத உரிமைகள் வெறும் அறிவிப்புகள், பேச்சுக்கள் மற்றும் வாய் வார்த்தைகள் மூலம் மட்டுமல்ல, செயற்பாட்டின் மூலம் அடையப்பட வேண்டும்.’
இலங்கை பலஸ்தீன மக்களின் நலனுக்காக ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களிலும் பொதுச் சபையிலும் தலைமை தாங்க வேண்டும் என தான் முன்மொழிய விரும்புவதாகவும், எதிர்க்கட்சி அத்தகைய நடவடிக்கையை நிபந்தனையின்றி ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
‘பலஸ்தீன மக்களின் நலனுக்காக நாம் தலைமை தாங்க வேண்டும், பலஸ்தீன மக்களை அழிக்கும் முயற்சிகளையும், அவர்களை வெளியேற்றும் அனைத்து முயற்சிகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.’
காஸாவில் உள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை அழிப்பது கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற குற்றங்களாகும் என விவரித்த அவர், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் இவ்வாறான மீறல்கள் சர்வதேச நீதி நிறுவனங்களின் முன் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
‘‘நக்பா தினம் துக்க தினம் அல்ல, ஆனால் உலகின் பழமையான அரசியல் பிரச்சினைகளில் ஒன்றிற்கு நியாயமான தீர்வைக் காண்பதற்கு சர்வதேச சமூகத்தை நடவடிக்கை எடுக்கத் தூண்டும் நாள்’’ என பலஸ்தீன தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் தெரிவித்தார். ‘தாமதமான நீதி என்பது நீதி மறுக்கப்படுவது அல்ல. அது நீதி அழிக்கப்படுவதாகும்,’ எனவும் அவர் குறிப்பிட்டார். உலகம் இப்போது செயல்பட வேண்டும் என்றும் பலஸ்தீன மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்களைச் செய்பவர்களை பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்பதற்காக இலங்கைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ஜனநாயகம் மற்றும் பாராளுமன்றவாதத்தின் பரந்த மற்றும் நல்லொழுக்க வரையறையுடன் உலகளாவிய பிரச்சினைகளை இலங்கை அணுகுகிறது என இலங்கை பலஸ்தீன ஒருமைப்பாட்டுக் குழுவின் இணைத் தலைவரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
‘எமது பாராளுமன்ற மற்றும் அரசாங்கத்தின் கொள்கை வகுக்கும் செயல்முறை பெறுமதிமிக்கது என்பதோடு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். நாம் வரலாற்றின் சரியான பக்கத்தில் இருக்க விரும்புகிறோம். மக்களால் வரலாறு எழுதப்படும்போது, உலகளாவிய நீதிக்காக நிமிர்ந்து நின்ற ஒரு தேசமாக இலங்கை பிரகாசிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்’ என அவர் சுட்டிக்காட்டினார்.
மே 15, 1948 அன்று நடந்த நக்பாவுக்குப் பிறகு பலஸ்தீன மக்கள் பல தசாப்தங்களாக ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பை அனுபவித்து வருகின்றனர் என்பதைக் குறிப்பிட்ட அவர், ஒக்டோபர் 7, 2023 தொடக்கம் பதினைந்து மாதங்கள் நீடித்த முன்னெப்போதும் இல்லாத இனப்படுகொலையான நக்பா, அமெரிக்காவின் முழு ஆதரவு மற்றும் உடந்தையுடன் மீண்டும் தொடங்கியுள்ளது’ எனக் குறிப்பிட்டார்
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை ‘அப்பாவிகள் மீதான படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் உலகத்தின் மனசாட்சியின் மீது படிந்த ஒரு கறை’ என வர்ணித்த பிமல் ரத்நாயக்க, சர்வதேச சமூகம் என்று தன்னைத்தானே அறிவித்துக் கொள்வது ‘முற்றிலும் அவமானகரமானது’ என்றும், இது உலகளாவிய ஒழுங்கை அரித்து, நீதியை நிலைநிறுத்தவும் அனைத்து மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்ட நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துவிட்டது என்றும் தெரிவித்தார்.
‘முழு மக்களும் இனப்படுகொலை மற்றும் இடம்பெயர்வை எதிர்கொள்ளும்போது நாம் சும்மா இருக்க முடியாது. பலவீனமானவர்களுக்கு அமுல்படுத்தப்படும் அதே வேளையில் பலம்வாய்ந்தவர்களுக்குப் புறக்கணிக்கப்படும் விதத்தில் சர்வதேச சட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரால் ஒரு கருவியாக மாறுவதை நாம் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இன அழிப்புக்கான அனைத்து முயற்சிகளையும் கண்டித்து, காஸாவில் உடனடி போர் நிறுத்தம், பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேலிய துருப்புக்களை திரும்பப் பெறுதல், ஜெரூஸலத்தில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாயல் முற்றுகை மற்றும் அவமதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது உரையில், காஸாவில் உள்ள அகதி முகாம்கள் மீதான குண்டுத் தாக்குதல்களைக் கண்டிப்பதில் வெளிவிவகார அமைச்சின் மெத்தனப் போக்கினை விமர்சித்தார். ‘சில நேரங்களில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையைப் பார்க்கும்போது, இதுபோன்ற ஒரு அறிக்கையை வெளியிடாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும். அது இங்கேயும் இல்லை, அங்கேயும் இல்லை.’ என்பது போல் காணப்படுகின்றது.
பலஸ்தீனக் கொள்கையில் இலங்கை அரசாங்கம் உண்மையிலேயே உறுதியாக இருந்தால், இஸ்ரேலுக்கு இலங்கைப் பணியாளர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பலஸ்தீன மக்களுக்கான வேலைகளை இலங்கைத் தொழிலாளர்கள் எடுத்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இலங்கை பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளும் நிகழ்வில் உரையாற்றினர்.