அரசாங்கத்தின் செயல்திறனைக் கேள்வி கேட்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறைக்க ஆரம்பித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை வழங்கப்படாத சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு, அதிகாரிகளால் நடத்தப்படும் ஊடக சந்திப்புகளில் பங்கேற்கும் வாய்ப்பை மறுப்பது அதன் ஒரு படியாகும்.
இதன் கீழ் அண்மையில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட முதல் ஊடகவியலாளராக, இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் உறுப்பினரான, லங்கா ஸ்கை நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் பதிவாகியுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியின் செல்வாக்கு மங்கி வருவதைக் காட்டும் நிலையில், ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்குள் இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது.
மே 8 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவிலாளர் சந்திப்பிற்கு லங்கா ஸ்கை நியூஸ் இணையதள ஆசிரியர் சாந்த விஜேசூரியவை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்திற்குள் நுழைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுமதி மறுத்திருப்பது இலங்கையில் ஊடக சுதந்திரம் மற்றும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான கடுமையான தாக்குதலாகும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வெகுஜன ஊடக அமைச்சருக்கு எழுத்து மூலம் தனது எதிர்ப்பையும் வெறுப்பையும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளரும் சங்கத்தின் நிர்வாக உறுப்பினருமான ஊடகவியலாளர் சாந்த விஜேசூரியவிடம் அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டை இல்லை என்ற காரணத்திற்காக, ஊடக சந்திப்பில் பங்கேற்க பணிப்பாளர் நாயகம் அனுமதிக்கவில்லை என, இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத் மற்றும் செயலாளர் ரங்க பண்டாரநாயக்க ஆகியோரால் கையொப்பமிடப்பட்டு, சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், அந்த நேரத்தில், சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு மற்றும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் இணைந்து வழங்கிய ஊடக அடையாள அட்டையையும், அவர் பணிபுரியும் லங்கா ஸ்கை நியூஸ் இணையதளத்தின் அடையாள அட்டையையும் ஊடகவியலாளர் வைத்திருந்ததாக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
2025 ஏப்ரல் 29 அன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை வைத்திருக்கும் ஊடகவியலாளர்கள் மாத்திரமே வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஊடக அமைச்சர் அந்தக் கூற்றை வெளியிட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர், ஊடகவியலாளர் விஜேசூரிய மீது விதிக்கப்பட்ட இந்தக் கட்டுப்பாட்டை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இது ஊடகவியலாளர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமைக்கு அச்சுறுத்தல் என அது வலியுறுத்தியுள்ளது.
"வெகுஜன ஊடக அமைச்சராக உங்களுடைய திமிர்பிடித்த அறிக்கைக்குப் பின்னர் நடந்த இந்த சம்பவம், ஊடகவியலாளர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமைக்கு அச்சுறுத்தலாகும், பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு பொறுப்புள்ள ஊடக அமைப்பாக, முந்தைய அரசாங்கங்களைப் போலவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஊடகங்களை அடக்குவதற்குச் செயல்படுவதை, அரசாங்கத்திற்கு விசுவாசமான ஊடகவியலாளர்கள் குழுவை மாத்திரம் ஊடகவியலாளர் சந்திப்புகளுக்கு அழைப்பதற்கான இழிவான முயற்சியாக நாங்கள் கருதுகிறோம்."
இலங்கை அரசாங்கத்தால் ஊடக அடையாள அட்டை வழங்கப்படுவது ஊடகவியலாளர்களை ஓரங்கட்டுவதற்கும், அரசாங்கம் தனது அதிகாரத்தை ஊடகவியலாளர்கள் மீது திணிப்பதற்கும் வழிவகுக்கும் எனக் கூறும் உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், அரசாங்கம் ஊடக அடையாள அட்டைகளை எவ்வாறு வழங்க வேண்டும் என்பதை முன்மொழிந்துள்ளது.
"எனவே, ஒரு மக்கள்வாத அரசாங்கம் நாட்டில் சுதந்திரமான ஊடகத்தைப் பராமரிப்பதை ஆதரித்தால், அது அடையாள அட்டைகளை வழங்குவதை ஒரு சுயாதீனமான நிறுவன கட்டமைப்பிற்கு ஒதுக்க வேண்டும், அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிற்கு அனுமதிக்க வேண்டும், மேலும் ஊடகவியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சரியான நேரத்தில் பதில்களை வழங்க வேண்டும்."
அமைச்சர் மற்றும் அவரது அதிகாரிகளின், சுதந்திர ஊடகங்கள் மூலம் அரசாங்கத்தின் மீதான நியாயமான விமர்சனங்களுக்கு பதிலளிக்க இயலாமை மற்றும் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமையின் அடையாளமாக இதனை கருதுவதாக, இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், லங்கா ஸ்கை நியூஸ் இணையதளத்தின் ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட தடையை சுட்டிக்காட்டியுள்ளது.
ஊடகவியலாளர் சாந்த விஜேசூரியவிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இலங்கையில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்கள் மீதும் விதிக்கப்பட்ட ஒரு தடையாகக் கருதுவதாக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த சம்பவம் தொடர்பாக எங்கள் ஆழ்ந்த கவலையை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். ஊடகவியலாளர் சாந்த விஜேசூரியவின் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான இந்தக் கட்டுப்பாடு, இலங்கையில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான ஒரு கட்டுப்பாடாகவும், இலங்கை மக்களின் பொதுவாக தகவல் அறியும் உரிமையைப் பறிக்கும் முயற்சியாகவும் கருதுகிறோம். எனவே, இந்த விடயத்தில் நீங்கள் அவசர கவனம் செலுத்துவீர்கள் என நம்புகிறோம்."
உலகளாவிய ஊடக சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் இலங்கை 139ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளதாக சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (RSF) தனது அண்மைய அறிக்கையில் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அரசாங்கத்தின் ஊடகத் தணிக்கை விதிக்கப்பட்டுள்ளது.