தொல்பொருள் தளத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவைச் சேர்ந்த இரண்டு தமிழ் விவசாயிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மே 29 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகிய இரு விவசாயிகளையும் ஜூன் 7 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி டி.பிரதீபன் உத்தரவிட்டார்.
இன்றைய தினம் (ஜூன் 4) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன் நடந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தயாபரன் லிகிர்தர், பொலிஸார் உட்பட பல அரசு நிறுவனங்களின் நடவடிக்கைகளை இனவாத செயற்பாடு என விமர்சித்தார்.
“இந்த கைதுகளையும் சட்டவிராதாமாகவும் இனவாதத்துடனும் செயற்படும் தொல்லியல் திணைக்களத்தையும் ஸ்ரீலங்கா பொலிஸ் மற்றும் வனவளத் திணைக்களத்தையும் வன்மையாக கண்டிப்பதோடு கைது செய்யப்பட்ட இரு அப்பாவி தமிழ் விவசாயிகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.”
“வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “விடுதலை செய் விடுதலை செய் விவசாயிகளை விடுதலை செய்” போன்ற கோசங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர்
காலனித்துவ வர்த்தமானி
தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சங்கநாயக்க தேரர் கல்கமுவே சாந்தபோதி ஆகியோர் செய்த முறைப்பாட்டை அடுத்து, புனித பிரதேசத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மே 10 அன்று மூன்று தமிழ் விவசாயிகளை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்தது.
ஆரம்பத்தில் முல்லைத்தீவின் குருந்தூர்மலை பகுதிக்கு 78 ஏக்கர் பரப்பளவு சொந்தமானது என, மே 12, 1933 அன்று ஆங்கிலேயர்களால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை மேற்கோள் காட்டி தொல்பொருள் துறை அதிகாரிகள் அறிவித்ததாக அப்பகுதியின் தமிழ் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர், தொல்பொருள் கலைப்பொருட்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படும் மேலும் 229 ஏக்கர் நிலம், குருந்தூர்மலை தொல்பொருள் காப்பகத்திற்காக தொல்பொருள் துறையால் வரையறுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் உள்ள தன்னிமுறிப்பு குளத்தின் கீழ் விவசாயத்தில் ஈடுபடும் அப்பகுதி மக்கள், 229 ஏக்கர் நிலத்தில் அவர்களின் உறவினர்கள் 100 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் நெல் வயல்களும் அடங்குவதாக கூறுகின்றனர்.
மே 10 ஆம் திகதி, குருந்தூர்மலை அடிவாரத்தில், மூன்று தொழிலாளர்கள் உழவு இயந்திரத்தின் ஊடாக நிலத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது, தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சங்கநாயக்க தேரரான கல்கமுவே சாந்தபோதி ஆகியோர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொலிஸார் மூன்று பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
மூவரில் பாடசாலை சிறுவனை விடுவிக்க பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி டி. பிரதீபன், சந்தேகநபர்களான சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.