மொஹமட் ருஷ்டியை PTA-வின் கீழ் ஜனாதிபதி கையெழுத்திட்டு சிறைக்கு அனுப்பியது 'உரிமை மீறல்'

காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் ஒரு இளைஞனை கைது செய்த இலங்கை பொலிஸார், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்ற தீர்மானத்திற்கு வந்தமையை  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விமர்சித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவு (CTID) மார்ச் 22 அன்று மொஹமட் லியாவுதீன் மொஹமட் ருஷ்டியை (Mohamad Liyaudeen Mohamed Rusdi) கைது செய்த பொலிஸார், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரை தடுத்து வைக்க, 'சில உளவியல் தூண்டுதலுக்கு அவர் உள்ளாகியிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.' என காரணம் குறிப்பிட்டனர். இந்த தீர்மானத்தை நியாயப்படுத்த ருஷ்டி எந்தவொரு வைத்திய பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை.

“சந்தேகநபரின் 'மன நிலை' அல்லது வேறு எந்த உளவியல் காரணியும் விசாரணைக்கு பொருத்தமானதாக இருந்தால், விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்னர் குற்றவியல் உளவியல், மனநல வைத்தியம் அல்லது இதே போன்ற துறையில் பயிற்சி பெற்ற ஒரு சுயாதீன நிபுணரிடமிருந்து அறிக்கையைப் பெற வேண்டுமென, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அனைத்து அதிகாரிகளுக்கும் எழுத்து மூல தெளிவான ஆலோசனையை வழங்குங்கள்,” என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸ் தலைவருக்கு பரிந்துரைத்துள்ளது.

"பக் இஸ்ரேல், இனவெறியை முடிவுக்குக் கொண்டுவருவோம்" என எழுதப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட மொஹமட் ருஷ்டியை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தமையை எதிர்த்து,  அவரது தாயார் அளித்த முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையின் 30 பக்க அறிக்கையில் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஏதேனும் மனநலப் பிரச்சினை அடையாளம் காணப்பட்டால், சந்தேகநபர் உடனடியாக ஒரு சட்ட வைத்திய அதிகாரியால் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட வேண்டுமனவும், தேவைப்பட்டால், சந்தேகநபர் சிகிச்சைக்காக சட்ட வைத்தி அதிகாரியால் பரிந்துரைக்கப்படும் ஒரு பொருத்தமான நிறுவனத்தின் பராமரிப்பில் வைக்கப்பட வேண்டுமென அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பானர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு தனித்தனி பரிந்துரைகளை வழங்கும் அறிக்கை, ஆங்கிலத்தில் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கை சிங்களம் மற்றும் தமிழில் கிடைக்காமைக்கு ஆணைக்குழுவின் இணையதளம் வருத்தம் தெரிவிக்கிறது.

ஸ்டிக்கரை ஒட்டியதற்காக கைது செய்யப்பட்ட  ருஷ்டி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்ததன் மூலம் பயங்கரவாத பொலிஸார் இளைஞரின் மனித உரிமைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

"இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்ட பிறகு, பாதிக்கப்பட்டவரின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பிரதிவாதிகளும் ஒரு நிறுவனமாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டுமென ஆணைக்குழு கருதுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் நிறுவன மற்றும் கொள்கை பிழைகள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் தவறான விளக்கங்களிலிருந்து இந்த மீறல்கள் நேரடியாக எழுந்தன எனவும், எந்தவொரு தனிப்பட்ட அதிகாரியின் செயல்களையும் காரணமாகக் கூற முடியாது எனவும் ஆணைக்குழு கருதுகிறது."

பொலிஸார் ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிடுவது மற்றும் விசாரணை என்ற பெயரில் இனக்குழுக்களை குறிவைப்பதையும் அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது . இது தொடர்பாக 2022 ஆம் ஆண்டு பொலிஸ் மாஅதிபர் வழங்கிய அறிவுறுத்தல்களை மீறி பொலிஸார் செயற்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

சந்தேகநபர் அல்லது விசாரணைகள் பற்றிய பாரபட்சமான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்துமாறு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளரை அறிவுறுத்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, 'இனத்தின் அடிப்படையில் குறிவைப்பதை'த் தவிர்த்து, சந்தேகநபரின் இன அல்லது மத பின்னணியில் தேவையற்ற கவனம் செலுத்தாமல், புறநிலை காரணிகளின் அடிப்படையில் மாத்திரமே விசாரணைகளை நடத்துமாறு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அனைத்து அதிகாரிகளும் எழுத்துப்பூர்வ, தெளிவான வழிமுறைகளை வழங்குமாறும் மேலும் பரிந்துரைக்கிறது.

இது தொடர்பாக, பெப்ரவரி 14, 2022 அன்று பொலிஸ் மாஅதிபர் வெளியிட்ட சுற்றறிக்கை இல. RTM CRTM-231 மற்றும் பத்திரிகை மற்றும் வானொலிக்கு தகவல்களை வழங்குதல் குறித்த இலங்கை பொலிஸ் திணைக்கள உத்தரவு இல. D5 ஆகியவற்றை மனித உரிமைகள் ஆணைக்குழு நினைவுபடுத்துகிறது.

பயங்கரவாத குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும்போது, 'நியாயமான சந்தேகத்தின்' தரநிலை குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை, சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்து, பொலிஸ்மா அதிபர் பரிந்துரைக்க வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரைக்கிறது. ருஷ்டியின் சட்டப்பூர்வமான வேலையில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் மற்றும் இலங்கை பொலிஸாரின் கூட்டுப் பொறுப்பு தொடர்பாக அனுபவித்த பாரபட்சத்திற்காக, பாதிக்கப்பட்டவருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இரண்டு இலட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் ஆணைக்கழு பரிந்துரைக்கிறது.

பலஸ்தீன இனப்படுகொலைக்கு எதிராக இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்ததற்காக தீவிரவாதக் குற்றச்சாட்டில் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியின் கையொப்பத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞரான மொஹமட் ருஷ்டி, நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுகள் இன்றி விடுவிக்கப்பட்டதோடு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் காலவரையற்ற பொலிஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி, ருஷ்டி மீது ஏப்ரல் 7, 2025 அன்று விதிக்கப்பட்ட தடையை இடைநிறுத்த பாதுகாப்பு அமைச்சருக்கு உடனடியாக பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, முதல் பிரதிவாதியான பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளருக்கு பரிந்துரை செய்துள்ளது.

 

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc