‘தமிழ் தேசியத்தை கொல்லும் ஆயுதங்கள்’ பற்றி ஐ.நா. பிரதிநிதியிடம் தமிழ் எம்.பி. விளக்கம்

போர் முடிந்த பின்னர் தமிழ் தேசியத்தை அழிக்க இலங்கை அரசு மற்றும் அரசப் படைகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பல ஆயுதங்கள் குறித்து வடக்கின் தமிழ்த் தலைவர் ஒருவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.

“போருக்குப் பின்னரும் தமிழர் தாயகப் பகுதிகள் பெரிதும் இராணுவமயமாக்கப்பட்டு, நில அபகரிப்புகள், மக்கள் தொகை மறுசீரமைப்பு, பொருளாதார புறக்கணிப்பு மற்றும் கலாசார அழிப்பு என்பவை தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கான ஆயுதங்களாக அரசாலும், அரச படைகளாலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.”

இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நிறுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ புதிய அரசாங்கமும் எவ்வித அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் கையளித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரே பிரான்ச், (Marc-André Franche) மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய – பசுபிக் பிராந்தியத்துக்கான தலைவர் ரோரி முங்கோவன் (Rory Mungoven) மற்றும் ஐ.நா. பிரதிநிதிகள் குழுவும் இந்த நிகழ்வில் பங்கேற்றதாக இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்பு பிரிவு அறிவித்துள்ளது.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக மனித உரிமைகள் பேரவையால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செய்யப்பட்ட குற்றச் செயல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க போதுமான அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என, ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகருக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

“மனித உரிமைகள் பேரவையின் 30/1 (2015) மற்றும் 46/1 (2021) தீர்மானங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான தீர்மானங்களை ஏற்றுக்கொண்டாலும், அவை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையும், செய்யப்பட்ட குற்றங்களின் வீரியத்தையும் ஈடுசெய்யத்தக்கவையல்ல என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.”

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆதாரங்களை சேகரிக்க ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட OSLAP பொறுப்புக்கூறல் திட்டத்தையும் தற்போதைய அரசாங்கம் தடுத்து வருவதாகவும் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் தலைவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

“இலங்கை அரசு OHCHR-இன் OSLAP திட்டத்தை தடையின்றி அணுகுவதைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்கான சர்வதேச முயற்சிகளையும் தடுக்கிறது.”

OSLAP திட்டத்தை கடுமையாக எதிர்க்கும் இலங்கை அரசாங்கம், உள்ளூர் நீதி பொறிமுறை பொறுப்புக்கூறலை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வல்லது எனக் கூறுகிறது.

தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வழங்குவதற்கான தெளிவான நோக்கத்துடன் ஒரு சர்வதேச நீதி பொறிமுறையை செயல்படுத்துமாறு தமிழ் மக்கள் பிரதிநிதி மனித உரிமைகள் உயர்ஸ்தானிரை வலியுறுத்துகிறார்.

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது தீர்மானங்களுக்கு அப்பால் நகர்ந்து, தமிழினப் படுகொலை விவகாரத்தை ஐ.நா பொதுச் சபைக்கும், ஐ.நா பாதுகாப்பு பேரவைக்கும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லும் தெளிவான குறிக்கோளுடன் கூடிய சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை செயற்படுத்த வேண்டுமென தங்களை தயவோடு கேட்டுக்கொள்கிறேன்.”

நீதிக்கான பாதையைத் தாமதப்படுத்துவது ஈழத்தமிழ் மக்களின் அழிவையும் விரைவுபடுத்தும் எனவும் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

“நீதிக்கான பாதைகளை திறப்பதில் ஏற்படும் தாமதம், இலங்கை அரசுக்கும் தமிழினப் படுகொலையாளிகளுக்கும் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான தைரியத்தை அதிகரிக்கும் சமநேரத்தில்; ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்தில் ஒரு தேசமாக அழிக்கப்படுவதையும் துரிதப்படுத்தும் என்ற அடிப்படையில் நீதி, உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவை தாமதிக்கப்படாதிருப்பதை தங்கள் கொள்கை ரீதியான தலைமைத்துவம் உறுதிசெய்ய வேண்டும்.”

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் ஜூன் 24 நாடாளுமன்றத்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்தார். இதன்போது நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்னவும் கலந்துகொண்டனர்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc