யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டவர்கள் ‘புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளனர்’

சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை 20 இற்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில், அவை போரின் முடிவில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடிச் சென்ற தமிழ்த் தாய்மார்களா? என்பது குறித்து போரில் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

“ஒரு பிள்ளையை இராணுவம் பிடித்துச் செல்லும் போது தாய் ஒருவர் மேலும் ஒருவரை துணைக்கு அழைத்துச் சென்றிருப்பார். தங்களை மண்ணுக்குள் புதைப்பார்கள் என நினைத்து அங்கே சென்றிருக்கமாட்டார். இவ்வாறு சென்றவர்களையே இராணுவம் கொலை செய்து மண்ணுக்குள் புதைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டுள்ளனர்.” என குறிப்பிடும் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா, தமிழர்கள் ஒவ்வொருவரும் அதற்காக குரல் கொடுக்க வேண்டுமெனவும், நீதியையும், நியாயத்தையும் கோர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறார்.

மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 26) இடம்பெற்ற ‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ என்ற தொனிப்பொருளில் ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதை’ என்ற ஆவணப்படத்தின் திரையிடல் மற்றும் கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட உதயச்சந்திரா இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணியில் உள்ள சித்துப்பாத்தி மயான மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, ​​19 பேரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 10 மாதங்களுக்கும் குறைவான மூன்று குழந்தைகளின் எலும்புகள் இருந்ததாக அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

நேற்று முன்தினம் (ஜூன் 26) மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமானபோது, மண்டை ஓட்டுடன் கூடிய மற்றொரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதாக அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிடும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். நேற்றைய தினம் (ஜூன் 27) மேலும் சில எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், ஜூன் 25 அன்று செம்மணியில் உள்ள சித்துப்பாத்தி மயான மனித புதைகுழிகளுக்கு அருகில், உண்மையை வெளிக்கொணரும் திறன் கொண்ட தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களின் விரிவான, வலுவான விசாரணை அவசியம் என வலியுறுத்தினார்.

“உண்மையை வெளிக்கொண்டு வரும் திறன் கொண்ட தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களால் நடத்தப்படும் விரிவான, வலுவான விசாரணைகள் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் வலி மற்றும் துன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே பாரிய மனித புதைகுழிகள் விடயத்தில் செய்ய வேண்டிய விடயம்”

புதைகுழியை பார்வையிட்ட பின்னர், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், செம்மணி புதைகுழிகளுக்கு அருகில் ‘மக்கள் செயல்’ அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான ஐ.நா. தலையீட்டைக் கோரும், ‘அணையா விளக்கு’ போராட்ட இடத்திற்குச் சென்று, பொதுச்சுடருக்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.

செம்மணிய உள்ளிட்ட பாரிய மனித புதைகுழிகளின் நிலைமையைக் கண்காணிக்கவும், தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு விடுக்கப்படும் கோரிக்கை உள்ளிட்ட, தங்கள் கோரிக்கைகள் அடங்கிய ஒரு அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமது கோரிக்கைகள் அடங்கிய ‘செப்புப் பட்டயத்தை’ உயர் ஸ்தானிகரிடம் ஒப்படைக்க மக்கள் செயல் அமைப்பினர் நடவடிக்கை எடுத்திருந்ததாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் மாத்திரமே நீதியை பெற்றுக்கொள்ள முடியுமென மன்னாரில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட மனுவல் உதயச்சந்திரா சுட்டிக்காட்டியுள்ளார்.

“கடந்த 16 வருடங்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நாங்கள் வீதியில் நின்று போராடி வருகிறோம். தமது உறவுகளுக்காக போராடிய எத்தனையோ தாய்மார்கள் மரணித்து விட்டனர். எத்தனையோ பேர் வலு இழந்து விட்டனர். எத்தனையோ வருடங்களாக போராடி விட்டோம். எமக்கு நீதி கிடைக்கவில்லை. இதற்கு பின்னரும் இந்த அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நீதியை பெற்றுத் தருமா? என்கின்ற கேள்வி எழுந்துள்ளது. அம்மாக்களும் போராடி சோர்வடைந்து விட்டனர். எவ்வாறாக இருந்தாலும் நாங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் மாத்திரமே எங்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.”

இறந்தவர்களை நினைவுகூரும் வாய்ப்பை அதிகரிக்கும் அமைப்பில் மாற்றங்கள் இருந்தபோதிலும், முந்தைய அரசாங்கங்களால் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை தேடல்கள் தொடர்வதாக, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் முடிவில் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் குறிப்பிட்டிருந்தார்

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc