கடந்த காலத்தில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட கொடூர இனவழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாதம், தற்போது தமிழர்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாட்டைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே கடந்த காலத்தில் சிங்களப் பேரினவாதத்தின் திட்டமிட்ட தமிழ் இனவழிப்பிற்கும், மனிதப் புதைகுழிகள் விவகாரத்திற்கும், தற்போதைய கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளுக்கும் பன்னாடுகள் தலையீடு செய்து முறையான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் இனவழிப்பிற்கு பன்னாட்டு நீதிப் பொறிமுறையூடாக மாத்திரமே நீதி பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தி வடக்கு – கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (26) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் தமிழ்மக்கள் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதுடன், அழிக்கப்பட்டுக் கொண்டுமிருக்கின்றனர். தற்போது வடகிழக்குத் தமிழர் தாயகப் பரப்பில் எங்கு பார்த்தாலும் மனிதப் புதைகுழிகள் இனங்காணப்படுகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் இந்த மனிதப் புதைகுழி விவகாரங்கள் பன்னாட்டுப் பொறிமுறையில் அகழ்வாய்வு செய்யப்படுவதுடன், இந்த மனிதப் புதைகுழி விவகாரங்களுக்கு பன்னாட்டு நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பதே எமது தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
தற்போது எமது தமிழ் மக்களுடைய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. அண்மையில் வவுனியா வடக்கில் தமிழர்களின் பழந்தமிழ் கிராமங்களில் ஒன்றான வெடிவைத்தகல்லில் திரிவச்சகுளம் பகுதியில் மகாவலி அதிகார சபையால் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் மிகத் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருப்பதை நேரில் சென்று பார்வையிட்டு, அந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை உரிய தரப்பினருக்குத் தெரியப்படுத்தி அந்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றோம்.