வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழாவானது இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை-29) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக ஆரம்பமாகியது. இதன்போது நல்லூர் ஆலய முன் வாயில் வழியாக திடீரென ஒரு இராணுவ வாகனம் உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நல்லூர் திருவிழா காலத்தில் குறித்த பகுதியில் நல்லூர் ஆலய வளாகத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் வாகனத்தை தவிர வேறு எந்த வாகனத்துக்கும் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை. அத்துடன் பாதணிகளுடன் செல்வதற்கும் அனுமதி இல்லை.
நல்லூர் கந்தன் ஆலயமானது உலகளாவிய ரீதியில் சிறப்பு பெற்று விளங்குகிறது. இவ்வாறான சூழ்நிலையில் இராணுவத்தினரின் குறித்த வாகனம் அத்துமீறி உள்நுழைந்தமை உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இராணுவத்தின் அடாவடி இன்னமும் தெடர்கிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.
கடந்த வருடம் திருவிழாவின்போதும் பௌத்த பிக்கு ஒருவர் வாகனத்தில் நல்லூர் வளாகத்திற்குள் சென்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது