கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை வைத்து இரு சமூகங்களுக்கிடையே குழப்பங்களை உருவாக்கும் அரசியல் பாணி இனிமேலும் அனுமதிக்கப்பட முடியாதது என்று நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்.
நேற்றையதினம் நாடாளுமன்ற ஒத்திவைக்கும் பிரேரணை நேரத்தில், பிரதேச செயலகங்களுக்கான எல்லை நிர்ணயத்தைக் கோரி முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் தனிநபர் பிரேரணையை முன்வைத்தார்.
அந்தப் பிரேரணை மீது உரையாற்றிய போதே சாணக்கியன் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:-
“இந்த விவகாரம் சமூக மட்டத்தில் பிரச்சினையாக மாறியதற்குப் பொறுப்பு தேசிய மக்கள் சக்தியின் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களே. அவர்கள் மூவரும் உண்ணாவிரதம் இருக்கப்போகின்றார்கள் என அறிவித்தார்கள். இது அரசாங்கத்தினுள்ளே இருந்து, அரசாங்கத்தையே எதிர்த்து நடக்கும் ஒரு வகையான ஆர்ப்பாட்டம்.
“கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் இரு சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சில இடங்களில் முஸ்லிம் காங்கிரஸூடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது. கடந்த காலங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்து வந்தனர். இது இனிமேல் மீண்டும் நடக்கக் கூடாது.
“கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக தமிழ் மக்களுக்கும் பிரச்சினை உள்ளது. ஆனால் இதைப்பற்றி பேசும் முஸ்லிம் சகோதரர்கள் அந்த பிரச்சினையை மறுக்கின்றனர். முஸ்லிம் மக்கள் எல்லைப் பிரச்சினையை எழுப்பும்போது, தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். ஆனால், இந்தமுறையும் உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து ஆட்சி அமைத்துள்ளனர். அந்த ஒற்றுமை தொடர வேண்டும்.
“மேலும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் இதற்கான தீர்வு அமையாது. மக்கள் எதிர்ப்பினால் எந்தவொரு நடவடிக்கையும் பலனளிக்காது. மக்கள் இணைந்து பேசிக்கொண்டு தீர்வைத் தேட வேண்டும். இல்லையெனில், இது இரு சமூகங்களுக்குள்ளும் பெரிய பிரச்சினையாக மாறும்.
“நசீர் அஹமட் அமைச்சுப் பதவியுடன் அரசுடன் சேர்ந்தார். ஆனால் தம் சமூகப் பிரச்சினைகளை முன்வைக்காமல், அரச அதிகாரிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்தார். ராஜபக்ஷக்களையும், அதிகாரிகளையும் வைத்து சாதிக்க இயலாமல் போனதா? அவர் உங்கள் கட்சியின் முன்னாள் உறுப்பினர். இன்று அவரை அரச பயங்கரவாதி என அழைக்கிறீர்கள். இதை ஏற்க முடியாது.
“அவ்வாறே, ரிஷாட்டும் அமைச்சராக இருந்தார். அப்போது இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கலாம். இன்று அரச உத்தியோகத்தர்கள் மீது குற்றச்சாட்டுவது வருத்தமளிக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.