மார்க்கம் நகர நகர சபையின் 7ம் வட்டாரத்திற்கான இடைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 29ம் திகதி நடைபெறுகின்றது. மேற்படி இடைத்தேர்தலில் ஐவர் போட்டியிட்டாலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான கிள்ளிவளவன் அவர்களுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக நம்பம்படுகின்றது. குறிப்பாக மேற்படி மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்தின் முன்னாள் அங்கத்தவரும் தற்போது பிக்கரிங் தொகுதிக்கு மத்திய பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ளவருமான யுனிற்றா நாதன் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அறியப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் அவர்கள் 6ம் திகதி புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார அலுவலகத்தின் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார் என்பது இங்கு குறிப்பிட்த்தக்கது.
6ம் திகதி புதன்கிழமை நடைபெற்ற தனது தேர்தல் பிரச்சார அலுவலகத்தின் திறப்பு விழாவில் உரையாற்றிய வேட்பாளர் கிள்ளவளவன் அவர்கள் அங்கு உரையாற்றும் போது. தான் கடந்த தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று தனது ஆதரவை அறிந்து கொண்டதாலும் தன்னிடம் உள்ள ஆற்றல் மற்றும் அனுபவம் ஆகியவற்றை பிரயோகித்து தன்னால் சிறந்த சேவையை வரியிறுப்பாளர்களுக்கு வழங்க முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
பிரச்சார அலுவலகத் திறப்பு விழாவில் திரண்டு வந்து கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அனைவரும் தங்கள் ஆதரவை முழுமையாக வழங்குவோம் என்று உறுதியளித்துச் சென்றனர் என்பதும் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அங்கு கூடியிருந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.