கரன்னாகொடவின் ஆங்கிலப் புத்தகத்திற்கு பிரித்தானியாவில் தடை

இலங்கையின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் கடற்படை அதிகாரியின் சுயசரிதையின் ஆங்கிலப் பதிப்பு, சர்வதேச புத்தக விற்பனை நிறுவனத்தால் பிரித்தானிய சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த குமார் ஜயதேவ கரன்னாகொடவின் சுயசரிதையின் ஆங்கிலப் பதிப்பை AmazonUK பிரித்தானிய சந்தையில் இருந்து நீக்கியுள்ளது.

சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்காக பிரித்தானியாவால் தடை விதிக்கப்பட்ட ஒருவரின் வெளியீட்டை விற்பனை செய்வது பிரித்தானிய சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (ITJP) எச்சரித்ததை அடுத்து, கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவின் ‘The Turning Point: The Naval Role in Sri Lanka’s War on LTTE Terrorism’ விற்பனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட தடைகளுக்கு உட்பட்ட ஒருவருக்கு பதிப்புரிமை மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட வளங்களை வழங்குவது பிரித்தானியாவில் ஒரு குற்றமாகும். இதற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இலங்கை கடற்படைத் தளபதியாக இருந்தபோது, 2008-2009 காலகட்டத்தில் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வசந்த கரன்னாகொட முக்கிய சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலையில் உள்ள கன்சைட் நிலக்கீழ் வதை முகாம், கொழும்பு சைத்திய வீதியில் அமைந்திருந்த 'பிட்டு பம்புவ' தடுப்பு முகாம் ஆகியவை அப்போதைய கடற்படைத் தளபதியாக இருந்த வசந்த கரன்னாகொடவிற்கு தெரிந்தே கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவால் நடத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

"லெப்டினன்ட் கமாண்டர் ஹெட்டியாராச்சி மற்றும் அவரது குழுவினருக்கு கடற்படைத் தலைமையகத்தில் உள்ள சட்டவிரோத சிறைச்சாலைகளை இயக்குவதற்கு அனுமதி அல்லது அதிகாரம் இல்லை, மேலும் இது முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அறிந்திருந்த மற்றும் ஒப்புதலுடன் இயங்கியது என்பதில் நியாயமான சந்தேகம் உள்ளது, " என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

போர்க்களத்தில் அவரது சிறந்த துணிச்சலை அங்கீகரிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் அட்மிரல் ஒப் தி ப்ளீட் வசந்த கரன்னாகொடவுக்கு ரண சூர பதக்கத்தை வழங்கியது. மேலும் அவர் விஷிஸ்ட சேவா விபூஷணம், உத்தமசேவா பதக்கம், இலங்கை குடியரசு ஆயுதப் சேவை பதக்கம், 50ஆவது சுதந்திர தினபதக்கம், இலங்கை பாதுகாப்பு படைகள் நீண்ட கால சேவை பதக்கம், ஜனாதிபதியின்பதவியேற்பு பதக்கம், 50வது சுதந்திர ஆண்டுவிழா நினைவு பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு ஒபரேஷன் பதக்கம், பூர்ண பூமி பதக்கம் மற்றும் ரிவிரெச பதக்கம் போன்ற பதக்கங்களையும் பெற்றுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc