இஸ்ரேல் பலஸ்தீன மக்களை குறிவைத்து மேற்கொண்டுவரும் இனப் படுகொலைகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இலங்கை குடியரசிற்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான முதலீடு, பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இஸ்ரேல் காஸா நகரத்தை ஆக்கிரமித்து உலக ஒருமைப்பாடாக இரு நாடுகளின் தீர்வை முழுமையாக அழித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 241, 338 தீர்மானங்களை முழுமையாக மீறி செயற்படும் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கிறேன். இன்று பலஸ்தீனில் நாட்டில் மிகப்பெரிய கொலைவெறியும் பெரும் துயருமே நடந்து வருகிறது.
மருத்துவமனைகளுக்கு குண்டு வீசி அழிவை ஏற்படுத்துவதும், உணவு விநியோகத்திற்கு தடையேற்படுத்தியதாலும் பஞ்சம் கூட ஏற்பட்டிருக்கிறது. அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து குழந்தைகள், தாய்மார்கள், பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வரும் அரச பயங்கரவாதத்தை ஒரு நாடாகவும், மக்களாகவும் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த மனித உரிமைக்காக வேண்டி எங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க அச்சம் கொள்ள வேண்டியதில்லை.
மத்திய கிழக்கு பலஸ்தீன், இஸ்ரேல் மோதல் 1948 இல் ஆரம்பமாகி 1956, 1967, 1973, 1978 என தொடர்ச்சியாக இந்த போர் நடைபெற்று வருகின்றது. கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு உருவானது. பல்வேறு உடன்பாடுகள் மூலம் இரு நாட்டுத் தீர்வுக்கு உலகமே உடன்பட்டுக்கொண்டாலும், அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலைக்கு இஸ்ரேல் தள்ளியுள்ளது. இரு நாடுகளுக்குப் பதிலாக ஒரு நாடாக மாற்ற முயல்கிறது.
ஹிட்லர் யூத மக்களுக்கு செய்த குற்றங்களை வெறுப்பதாகவும், அதனால் வேறொரு மக்கள் பிரிவுக்கு அதை திணிக்க உரிமை இல்லை என்றும், நமது நாடு இதற்காக வேண்டி இராஜதந்திர ரீதியாக செய்யக் கூடிய அதிகபட்ச தலையீட்டை செய்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வு மூலம் மத்தியஸ்த வழியை நோக்கி செல்ல வேண்டும். பலஸ்தீன மக்களினது உணவு, குடிநீர் வசதிகளை வேண்டுமென்றே பறித்து நிவாரணங்களை வழங்கும் அமைப்புகளுக்கு, பொதுமக்களுக்கு உணவு வழங்குவதை கூட நிறுத்தி, குண்டு வீசி வருகின்றனர். இவ்வாறான நிலைக்கு மத்தியில் இதனை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன் என்றார்.