யாழில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை; அறுவர் கைது

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் திங்கட்கிழமை (01) கைதுசெய்யப்பட்டனர்.

கொலை சம்பவத்துக்கு பின்னர் குறித்த கும்பல் ஹயஸ் வானில் யாழ் மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டத்துக்கு தப்பிச் சென்றபோது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது ஹயஸ் வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ஆடைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

நீண்ட காலமாக இரண்டு வன்முறைக் கும்பலிடைய காணப்பட்ட பகைமை உணர்வே குறித்த கொலைச் சம்பவத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்தில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டு வன்முறை கும்பலைச் சேர்ந்த நபர்களிடையே மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்க மற்றைய தரப்பு தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் மறுத்து வந்துள்ளது.

அதேவேளை அதற்கு பழிதீர்க்கும் முகமாக சிறைக்குள் உள்ள நபரின் வழிகாட்டலுக்கமைய தெல்லிப்பழையில் வட்டி தொழில் செய்யும் ஒருவரிடம், கொலை செய்யப்பட்டவருக்கான தாக்குதலுக்கான திட்டம் கொடுக்கப்பட்டது.

இதன்படி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த நபர்கள் இணைக்கப்பட்டு தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டது.

கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டில் அருகில் வசிக்கும் நபர் ஒருவரும் இதற்கு ஒத்துழைத்துள்ளதுடன் பிரத்தியேக கையடக்க தொலைபேசிகள், சிம்கள் வாங்கப்பட்டு அதன் ஊடாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டபடி தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை திட்டத்தை மேற்கொண்ட வட்டித் தொழில் செய்பவர் தனது ஹயஸ் வாகனத்தில் ஏற்றி தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தாலும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தனியான விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்தில் பதிவான காணொளி, கொல்லப்பட்ட நபரின் பின்ண்ணி என்பவற்றை வைத்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

கைதானவர்கள் 20 வயது தொடக்கம் 25 வயதுக்குட்பட்டோர் எனவும் நயினாதீவு, கொக்குவில், தெல்லிப்பழை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான ஆறு பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc